search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றம் - கேப்டன் மேத்யூஸ் புலம்பல்
    X

    ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றம் - கேப்டன் மேத்யூஸ் புலம்பல்

    ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #AFGvSL
    அபுதாபி:

    இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    அபுதாபியில் நேற்று நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கை அணி 91 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.

    இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல் ஆட்டத்தில் 150 ரன்னுக்கு குறைவாக எடுத்தோம். இந்த ஆட்டத்தில் 158 ரன் வரை தான் எடுத்தோம். ஆப்கானிஸ்தான் மிகவும் அபாரமாக விளையாடி எங்களை வெளியேற்றி விட்டது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


    எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டர் வரிசை மீண்டும் சொதப்பி விட்டது. பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பீல்டிங்கிலும் முன்னேற்றம் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் மிகவும் மோசமாக இருந்தது.

    எங்கள் அணி வீரர்களுக்கு நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது தெரியவில்லை. இரண்டு ஆட்டத்திலும் 160 ரன் கூட எடுக்க முடியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் கூறும்போது, ‘ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் திட்டமிட்டு விளையாடினார்கள். அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

    ‘பி’ பிரிவில் இருந்து வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இரு அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதலிடத்தை பிடிக்கும். #AsiaCup2018 #AFGvSL #Mathews
    Next Story
    ×