search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பையை வென்றது அற்புதமானது- பிரான்ஸ் கால்பந்து அணி பயிற்சியாளர் மகிழ்ச்சி
    X

    உலக கோப்பையை வென்றது அற்புதமானது- பிரான்ஸ் கால்பந்து அணி பயிற்சியாளர் மகிழ்ச்சி

    உலக கோப்பையை வென்றது அற்புதமானது என்று பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் தெரிவித்தார். #FIFAWC2018 #Champion #France
    மாஸ்கோ:

    ரஷியாவில் அரங்கேறிய 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்தது. ஏற்கனவே பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்று இருந்தது.

    பிரான்ஸ் அணி கோப்பையை வென்ற மறு வினாடியே பிரான்ஸ் நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியது. ரசிகர்கள் தெருக்களுக்கு திரண்டு வந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கொடிகளுடன் தெருக்களில் வெற்றி உலா வந்தனர். பாரீஸ் உள்பட சில இடங்களில் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டம் வரம்பு மீறியது. சிலர் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரசிகர்களை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    வெற்றிக்கு பிறகு பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பையை வென்றது உண்மையிலேயே அற்புதமானதாகும். இறுதிப்போட்டியில் நாங்கள் பெரிய அளவில் விளையாடவில்லை. இருப்பினும் எங்களது மன உறுதியை வலுவாக வெளிப்படுத்தினோம்’ என்றார்.

    உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் கால்பந்து அணி நேற்று நாடு திரும்பியது. பாரீஸ் நகரில் வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட போது எடுத்தபடம். வீரர்களை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

    பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்மான் அளித்த பேட்டியில், ‘வெற்றிக்களிப்பில் நான் எங்கு இருக்கிறேன் என்பதே தெரியவில்லை. சிறப்புக்குரிய இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் என்பதால் நாங்கள் தொடக்கத்தில் சற்று பயத்துடன் தான் செயல்பட்டோம். போகப்போக இயல்பு நிலைக்கு திரும்பி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தோம். அதில் நாங்கள் வித்தியாசத்தை காட்டினோம். உலக கோப்பையை எங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும் ஆவலுடன் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

    பிரான்ஸ் அணியின் நடுகள வீரர் பால் போக்பா கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று எனது இளம் வயதிலேயே கனவு கண்டேன். அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களால் இந்த கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு நமது உலக கோப்பை கனவு, நனவாக இன்னும் 90 நிமிடங்கள் தான் இருக்கிறது என்று எல்லோரிடமும் தெரிவித்தேன்’ என்றார்.

    தோல்வி கண்ட குரோஷியா அணியின் பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கருத்து தெரிவிக்கையில், ‘நான் நடுவர்களின் முடிவு குறித்து ஒருபோதும் கருத்து தெரிவிக்க மாட்டேன். இருப்பினும் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இதுபோல் பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கக்கூடாது. இதனால் பிரான்ஸ் அணியின் வெற்றி தரம் எந்த வகையிலும் குறைந்து விடாது. இந்த உலக கோப்பை போட்டியில் நாங்கள் ஆடிய சிறந்த ஆட்டம் இதுவாக இருக்கலாம். நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தோம். ஆனால் கோல்களை விட்டு விட்டோம். பிரான்ஸ் போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடுகையில் தவறு செய்யக் கூடாது. இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளித்தாலும், உலக கோப்பை போட்டியில் எங்களது செயல்பாட்டை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது இடம் பிடித்த குரோஷியா அணி நேற்று சொந்த நாட்டுக்கு திரும்பியது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சி. லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து குரோஷிய அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் பெனால்டி வாய்ப்பு எங்களை வெளியேற்றி விட்டது. பெனால்டிக்கு பிறகு மீண்டு வருவது கடினமாகி விட்டது. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாங்கள் அதிகம் விரும்பினோம். ஆனால் கால்பந்து ஆட்டத்தின் மகத்துவம் இது தான். பிரான்ஸ் அணி எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. நாங்கள் சுய கோலும், பெனால்டி வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கி விட்டோம். எனது எதிர்காலம் குறித்து தற்போது முடிவு எதுவும் எடுக்க முடியாது. நாடு திரும்பி ஓய்வுக்கு பிறகு முடிவு செய்வேன்’ என்றார். #FIFAWC2018 #Champion #France
    Next Story
    ×