என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வளங்கள் நல்கும் வரலட்சுமி விரதம்!
    X

    வளங்கள் நல்கும் வரலட்சுமி விரதம்!

    • பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
    • கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும்.

    சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் கடைப்பிடிக்கும் விரதங்களுள் முக்கியமானது வரலட்சுமி விரதம். இது கணவனின் ஆயுள், ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் வரலட்சுமியை என்றென்றும் தங்கள் வீட்டிலேயே தங்க வைப்பதற்காக மேற்கொள்ளும் விரதம். ஆண்டுதோறும் ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக் கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    வரலாறு: சவுராஷ்டிராவை ஆண்ட பத்ரச்ரவா மன்னனின் மனைவி கசந்திரிகா. இவர்களுக்கு ஏழு ஆண் மகன்கள் ஒரு பெண் குழந்தை. கசந்திரிகாவின் நற்குணங்களால் கவரப்பட்ட மகாலட்சுமி, அவள் மீது கொண்ட கருணையால் அருளாசி வழங்கும் எண்ணத்தில் கசந்திரிகாவின் வீடு தேடி ஒரு பழுத்த சுமங்கலிப் பெண்ணாகச் சென்றாள்.

    அந்தப் பெண்ணைப் பார்த்ததும், "அம்மா, நீங்கள் யார்? என்று வினவினாள் கசந்திரிகா. அதற்கு அந்த சுமங்கலிப் பெண், "உத்தமியே மகாலட்சுமி அவதரித்த இந்த துவாதசி வெள்ளிக்கிழமையன்று நன்றாக உண்டு, தாம்பூலம் தரித்துக் கொண்டு, பகல் வேளையில் உறங்கிக் கொண்டிருக்கிறாயே?" என்று கேட்டாள். தவறை சுட்டிக் காட்டியதும் ஆணவம் கண்ணை மறைக்க கோபமே கொள்ளாத கசந்திரிகா சுள்ளென்று சினம் கொண்டாள்.

    கோபத்தின் உச்சியில் என்ன செய்கிறோம் என்ற நினைவின்றி அந்தப் பழுத்த சுமங்கலியின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு, "எனக்கே புத்தி சொல்கிறாயா? என் கண் முன் நிற்காமல் உடனே ஓடி விடு" என்று கூறி துரத்தி விட்டாள். அழுதபடி வெளியே வந்த அந்த அம்மணியைக் கண்ட கசந்திரிகாவின் மகள் சியாமா, 'அம்மா ஏன் அழுகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டாள்.

    "பெண்ணே, உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்காக என்னை அடித்து அவமானப்படுத்தி துரத்தி விட்டாள். அதனால்தான் இங்கிருந்து திரும்பிப் போகிறேன்" என்றாள். உடனே சியாமா அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தி அமரச் செய்து, "அந்த நல்லதை எனக்குச் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்" என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, அந்தக் கன்னிப் பெண் சியாமாவுக்கு வரலட்சுமி விரதத்தின் மகிமை மற்றும் அதை அனுஷ்டிக்கும் வழிமுறைகளைப் பற்றி எடுத்து கூறினாள்.

    மகாலட்சுமி எடுத்து தந்த நோன்பு முறையை இம்மி பிசகாமல் கடைப்பிடித்து வந்தாள் சியாமா. அதனால் அந்த வீட்டிலேயே வரலட்சுமி தங்கிவிட, அங்கே செல்வமும், அமைதியும் நிலையாகக் குடியிருந்தன.

    சியாமா, திருமணப் பருவம் எட்டியதும் மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான் பத்ரச்ரவா. அதையடுத்து கணவனின் கரம்பிடித்து புகுந்த வீட்டுக்குச் சென்ற சியாமா, இத்தனை நாள் பூஜித்து வந்த வரலட்சுமி தேவியின் திருமுகத்தையும் தன்னுடன் எடுத்து சென்றாள்.

    புகுந்த வீட்டிலும் வரலட்சுமி விரதத்தைத் தவறாது கடைப்பிடித்தாள். அதனால் அவர்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகின. ஆனால் கசந்திரிகாவோ மகாலட்சுமியை அவமானப்படுத்தி துரத்தி விட்டதால் அவளை விட்டு நீங்கி நிரந்தரமாக சியாமா வீட்டிலேயே தங்கி விட்டாள் வரலட்சுமி. இதனால் பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்குள் ஓடி ஒழிந்து உணவுக்குக்கூட வழியற்று பராரியாகத் திரிந்தனர்.

    அவர்களுக்காக சியாமா அனுப்பி வைத்த தங்கக்காசுகளும், கரித்துண்டுகளாக மாறின. சியாமாவுக்கு தனது தாய், சுமங்கலிப் பெண்ணாக வந்த மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. அம்மாவிடம் நடந்தவைகளை நினைவுப்படுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, நோன்பின் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள். அதன்படியே கசந்திரிகாவும் வரலட்சுமி நோன்பு இருக்கத் தொடங்கினாள்.

    அதன்பிறகு அவர்கள் வாழ்வில் வசந்தம் திரும்ப, இழந்த செல்வங்களும் அதிகாரமும் மீண்டும் கிடைத்தன.

    மகாலட்சுமியே நேரடியாக வந்து விரதமுறைகளைச் சொல்லிக் கொடுத்து மேற்கொள்ளச் செய்ததால். இந்த விரதத்தை அனுசரிப்பவர்களும் குரு முகமாக, யாரேனும் பெரியவர்கள் எடுத்து கொடுக்க அதை தீக்ஷையாகப் பெற்று விரதத்தை மேற்கொள்வது வழக்கம். இதற்காக திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்ணை ஆடி நோன்புக்காக மறுவீடு அழைத்து வந்து, நோன்பு நோற்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து நோன்பு நோற்கச் செய்வார்கள்.

    இதில் வெள்ளியிலான அம்மன் முகத்தை கலசத்தில் வைத்து அலங்கரித்தல், செம்பில் அம்மன் முகத்தை வரைதல், சுவற்றில் அம்மன் ரூபத்தை தீட்டுதல் என்று பல்வேறு முறைகள் உள்ளன. அந்தந்த வீட்டு வழக்கப்படி நோன்பு முறைகளைக் கற்றுக் கொள்ளும் பெண்கள் தங்கள் வீட்டில் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடிப்பார்கள்.

    மண்டபம் அமைத்தல்: முதல் நாள் வியாழக்கிழமையே வீட்டை சுத்தப்படுத்தி, தோரணங்கள் கட்டி அழகுப்படுத்த வேண்டும். மரத்தாலான இருக்கையை (ஸ்டூல்) நன்கு கழுவி காயவைத்து அதில் மண்டபம் அமைப்பது வழக்கம். சில வீடுகளில் இதற்காகவே தனியாக ஒரு மர இருக்கையை ஒதுக்கி வைத்திருப்பார்கள். அதற்கு வெள்ளையடித்து காவி வர்ணம் பூசி, மண்டபம் அமைக்கும் இடத்தில் கொண்டுவந்து கிழக்கு முகமாகப் போட வேண்டும்.

    அதன்மேல் ஒரு பட்டாடையை விரித்து நான்குபுறமும் மாவிலைத் தோரணங்களை சுற்றிக் கட்ட வேண்டும். நான்கு கால்களிலும் சிறிய வாழைக் கன்றுகளைக் கட்டி அலங்கரிக்கவும். இருக்கையின் உட்புறம் இரு கால்களுக்கு இடையில் ஒரு மனைப்பலகையைப் போட்டு அதில் மாக்கோலமிட்டு மண்டபத்தை தயார்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

    அம்மனின் திருமுகத்தில் காதோலை, கருகமணி அணிவித்தல் மற்றும் இன்னபிற அலங்காரங்களையும்கூட செய்து வைத்து கொள்ளலாம். இதில் சிலர் மண்டபம் எதுவும் அமைக்காமல் வெறுமனே மனை மீது கலசம் அமைப்பவர்களும் உண்டு, இன்னும் சிலர் சுவற்றில் கஜலட்சுமி உருவத்தை வரைந்து வைத்து நோன்பு நோற்பதும் உண்டு. அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதுபோக நோன்பு சரடுகள் மற்றும் கோடி தந்தம் போன்றவற்றையும் தயாராகச் செய்து வைத்து கொள்ளலாம்.

    விரத பூஜை: வெள்ளிக்கிழமை காலையில் எழுந்ததும் எண்ணெய் தேய்த்து குளித்து தூய ஆடையணிந்து பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜையறையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து, மண்டபத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் மனை மீது இலை விரித்து பச்சரிசியைப் பரப்ப வேண்டும். கலசம் வைக்கும் தாம்பாளத்தில் நெல் அல்லது கோதுமையைப் பரப்பி அதன்மீது நீர் அல்லது தானியம் நிரப்பிய பூரண கலசக் கும்பத்தை வைக்கவும்.

    முகம் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் தேங்காய் மீது அம்மனின் முகத்தைக் கட்டலாம். செம்பு மீது அம்மன் உருவத்தை வரைபவர்கள் சுண்ணாம்பைக் கரைத்து அம்மனின் முகத்தை வரையலாம். அந்தத் தாம்பாளத்தை வீட்டின் மையக் கூடத்தில் போடப்பட்டிருக்கும் ஒரு மனை மீது வைத்து, சுமங்கலிப் பெண்கள் இருபுறமும் பிடித்து தூக்கிக் கொண்டு, வரலட்சுமி அம்மனை வீட்டுக்குள் அழைக்கும் பாடலை பாடியபடி மண்டபம் வைத்திருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து மண்டபத்தில் பரப்பியிருக்கும் அரிசி மீது கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

    ஒரு வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு அருள் புரிய வேண்டி விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூர்வாங்க பூஜையைத் தொடர்ந்து வரலட்சுமியைக் கலசத்தில் ஆவாஹனம் (எழுந்தருளச்) செய்து, பிரதான பூஜையைத் தொடங்க வேண்டும்.

    நைவேத்திய பதார்த்தங்கள்: பூஜை முடிந்ததும் நைவேத்யமாக இட்லி, அன்னம், பருப்பு, சாம்பார், ரசம், மோர்க் குழம்பு, அவியல், கூட்டு, கறி வகைகள், வடை, சர்க்கரைப்பொங்கல், பாயசம், வெள்ளரிக்காய் மற்றும் நெல்லிக்காய் பச்சடி, தேங்காய் பூரணம்-எள்ளு பூரணம் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, கோசம்பரி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, நாவல் பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

    இத்தனை வகைகள் முடியாவிட்டால் பழ வகைகள் மற்றும் பாயாசம் மட்டும் கூட படைக்கலாம்.

    நிவேதனம் முடிந்ததும், தீப, தூபங்கள் காட்டி வணங்க வேண்டும். பிறகு அம்மனை மனதாரப் பிரார்த்திக் கொண்டு, நோன்புச் சரடை முதலில் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க வேண்டும். அதன்பிறகு வீட்டின் மூத்த பெண்மணிக்கு அணிவித்துவிட்டு, வரிசையாக எல்லோருக்கும் அணிவிக்க வேண்டும். சரடு கட்டிக் கொள்ளும்போது ஒரு மூடி தேங்காய், ஒரு வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு வலது கையில் சரடைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

    இவ்விதமாய் எல்லாம் சுபமாய் முடிந்ததும் அம்மனுக்கு மங்கள ஆரத்தி எடுத்து, வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் நடுவில் ஆரத்தி கலவையை ஊற்ற வேண்டும். பிறகு அனைவரும் கூடியிருந்து பிரசாதங்களை உண்ட பிறகு. பூஜைக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மாலை ஆரத்தி: மாலையில் விளக்கேற்றி அஷ்டோத்திரம் சொல்லி, பாடல்கள் பாடி பூஜை செய்து, அவல், வெல்லம் அல்லது ஏதேனும் சுண்டல் வகைகளை நைவேத்யம் செய்தல் வேண்டும். தீபம் காட்டி மங்கள ஆரத்தி எடுத்து அம்மனை நித்திரை கொள்ள செய்ய வேண்டும். இரவில் பிரசாதங்களை மட்டும் உண்டுவிட்டு உறங்க வேண்டும்.

    புனர் பூஜை: மறுநாள் காலையில் புனர் பூஜை செய்து பால், பழம், கல்கண்டு ஆகியவற்றைப் படைத்து தீபம் காட்டிவிட்டு, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். அதன்பிறகு அம்மனை கலசத்துடன் எடுத்து கதவுக்கு பின்புறமாய் வைத்துவிட வேண்டும் அல்லது வீட்டின் அரிசிப் பெட்டிக்குள் வைத்து மூடி விடவேண்டும். இதை அவரவர் வீட்டு வழக்கப்படி செய்வது உத்தமம். இப்படிச் செய்வதால் நம் வீட்டுக்கு வந்த வரலட்சுமி அம்மன் நம்மோடு நம் வீட்டிலேயே தங்கி விடுவதாக ஐதீகம்.

    சிறிது நேரம் கழித்து கலசத்தை கலைத்து அம்மன் முகத்தை பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். கலசத்து நீரை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும். (கலசத்தில் தானியங்கள் போட்டிருந்தால் அதை நாம் சமைக்கும் தானியத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.) கலசத்தில் போட்டிருந்த நாணயத்தைப் பணப் பெட்டிக்குள் வைத்துக் கொள்வது வழக்கம். அதன்பிறகு மண்டபத்தை கலைத்து பூஜையறையை சுத்தம் செய்து கொள்ளலாம். இவ்விதமாய் வரலட்சுமி விரத பூஜையை சுபமாய் நிறைவேற்றிட வீட்டில் என்றும் செல்வமும் வளமும் நிலைத்திருக்கும்.

    Next Story
    ×