என் மலர்
இந்தியா

ராஷ்டிரபதி பவனில் 'ராஜாஜி' சிலை திறப்பு.. 'லுட்யன்ஸ்' சிலை அகற்றம் - பின்னணி என்ன?
- மகாத்மா காந்தியின் சிலைக்கு எதிரே ராஜாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
- லுட்யன்ஸ் டெல்லி என்று அழைக்கப்படுகிறது.
டெல்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ராஜாஜியின் சிலையை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரல் ராஜாஜி என்று அழைக்கப்படும் சி.ராஜகோபாலாச்சாரி ஆவார். 1948 முதல் அவர் அந்த பதவியில் அவர் இருந்தார்.
1950 ஜனவரி 26, இல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின் அந்த பதவி நீக்கப்பட்டு ஜனாதிபதி பதவி உருவாக்கபட்டது. கவர்னர் ஜெனரலாக இருந்த சமயம் ராஜாஜி ராஷ்டிரபதி பவனில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவரின் நினைவை போற்றும் வகையில் ராஷ்டிரபதி பவன் அசோக் மண்டபத்திற்கு அருகிலுள்ள பிரமாண்டமான படிக்கட்டுப் பகுதியில், மகாத்மா காந்தியின் சிலைக்கு எதிரே ராஜாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் முன்பு இருந்த எட்வின் லுட்யன்ஸ் என்பவரின் சிலைக்குப் பதிலாகவே ராஜாஜியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கட்டிட கலைஞரான எட்வின் லுட்யன்ஸ், 1912-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் புதிய தலைநகராக டெல்லியை வடிவமைக்க நியமிக்கப்பட்டவர் ஆவார்.
தற்போது அவரின் சிலை அகற்றப்பட்டுள்ள, ராஷ்டிரபதி பவன் உட்பட டெல்லியின் பல முக்கிய கட்டிடங்களை அவரே வடிவமைத்தார்.
அவர் வடிவமைத்த பிரதான கட்டிடங்கள் அமைந்துள்ள 26 சதுர கிலோமீட்டர் பகுதி லுட்யன்ஸ் டெல்லி என்று அழைக்கப்படுகிறது.

நேற்று ராஜாஜி சிலையை திறந்து வைத்த நிகழ்வில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ராஜாஜி கவர்னராக ஜெனரல் மாளிகைக்கு வந்தபோது, தனது அறையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் மகாத்மா காந்தியின் படங்களை வைத்தார்.
இந்தியா அப்போது, டொமினியன் அந்தஸ்தில் இருந்தபோதே, இந்தியர்களின் இதயங்களில் சுயராஜ்யம் முழுமையாக நிலைநாட்டப்பட்டுவிட்டது என்ற செய்தியை அவர் இதன் மூலம் உணர்த்தினார்.
முன்பு ராஷ்டிரபதி பவனில் இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டிஷ் அதிகாரிகளின் படங்கள் இருந்தன. ஆனால் இப்போது, 'பரம் வீர் தீர்கா' பகுதியில் பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் படங்கள் அலங்கரிக்கின்றன.
இந்திய செம்மொழிகளின் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் நூல்களைப் பாதுகாக்க ராஷ்டிரபதி பவனில் 'கிரந்த் குடிர்' என்ற பாரம்பரிய நூலகம் நிறுவப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய செய்தியை கலாச்சாரத்துறை அமைச்சர் வாசித்தார். அதில், "வரலாற்றுச் சிறப்புமிக்க ராஷ்டிரபதி பவனில் ராஜாஜியின் சிலையைத் திறப்பது இந்திய மக்களுக்குப் பெருமைக்குரிய தருணம்" என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.






