

மோடி@20 நனவாகும் கனவுகள் என்ற தமிழாக்கப் புத்தகத்தின் வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது. காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளதாவது:
கடந்த 8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014ல் இருந்து இதுவரை மீன்வளத்துறைக்காக ரூ.32,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்நடைகளுக்கும் அவசர ஊர்திகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது.
அதன் பயனாக தற்போது நாட்டில் 4,332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 அவரச ஊர்திகள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு உள்ளன. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.
8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு உள்ளன. ஜன்தன் இயக்கத்தின் மூலம் பெரும்பான்மையாக பெண்கள் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். 2047ஆம் ஆண்டு இந்தியாவை முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.