என் மலர்tooltip icon

    இந்தியா

    இளம்பெண்ணின் 7 மாத கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
    X

    இளம்பெண்ணின் 7 மாத கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

    • எந்தவொரு பெண்ணையும் தனது விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்த முடியாது
    • இந்தியச் சட்டப்படி பொதுவாக 24 வாரங்கள் வரை மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி உண்டு

    18 வயது பெண்ணின் 30 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக மும்பை உயர் நீதிமன்றம் இந்தக் கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்து, குழந்தையை வளர்க்க விரும்பவில்லை என்றால் தத்துக் கொடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் கருக்கலைப்பிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    கருவை கலைப்பது பெண்ணின் ஆரோக்கியத்திற்கு எந்தப் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய மருத்துவக் குழுவின் அறிக்கையை மதிப்பாய்வு செய்தபிறகு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 17 வயதில் கருத்தரித்து தற்போது 18 வருடம் மற்றும் நான்கு மாத வயதாகிறது அப்பெண்ணுக்கு. தனது பக்கத்து வீட்டுச் சிறுவனுடன் இருந்த உறவினால் கர்ப்பமடைந்துள்ளார்.

    கருக்கலைப்பு சட்டத்தில் உள்ள காலக்கெடுவைவிட, சிறுமியின் மனநலன் மற்றும் அவரது விருப்பத்திற்கே முன்னுரிமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பெண்ணிற்கு விருப்பமில்லை என்றால், கர்ப்பத்தை தொடர கட்டாயப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

    எந்தவொரு பெண்ணையும், குறிப்பாக மைனர் சிறுமியை, அவரது விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு தெரிவித்தது. பெண்ணின் இனப்பெருக்க சுயாட்சி மற்றும் உடல் மீதான உரிமை மிக முக்கியமானது. பாதுகாப்பான மருத்துவக் கருக்கலைப்புக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தால், அது போன்ற சூழலில் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்படாத மற்றும் பாதுகாப்பற்ற இடங்களை நாடும் அபாயம் உள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

    மும்பையிலுள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனைத்து மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி இந்தக் கருக்கலைப்பை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியச் சட்டப்படி பொதுவாக 24 வாரங்கள் வரை மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி உண்டு. அதற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கருவை கலைக்க நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி கட்டாயமாகும்.

    Next Story
    ×