search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரீல்ஸ் வீடியோ மூலம் பழக்கமான தனியார் பள்ளி ஆசிரியையை கொன்ற வாலிபர் கைது
    X

    கொலை செய்யப்பட்ட ஆசிரியை தீபிகா - கைதான வாலிபர் நிதிஷ்.

    ரீல்ஸ் வீடியோ மூலம் பழக்கமான தனியார் பள்ளி ஆசிரியையை கொன்ற வாலிபர் கைது

    • கடந்த 20-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற தீபிகா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
    • தீபிகாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், பாண்டவபூர் மாணிக்யன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (35) . இவரது மனைவி தீபிகா (28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    தீபிகா மேலுகோடு என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மேலும் தீபிகா நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இவரது வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற தீபிகா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தொடர்ப்பு கொள்ள முயன்றனர்.

    ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தீபிகா மாயமானதாக மேலுகோட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதற்கிடையே மேலுகோட் யோக நரசிம்ம சுவாமி கோவிலின் மலை அடிவாரத்தில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் பாதி அழுகிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக மீட்கப்பட்டது மாயமான ஆசிரியை தீபிகா என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் விரைந்து வந்து பிணமாக கிடந்தது தீபிகா தான் என்பதை உறுதி செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்து புதைத்தது யார் என்று போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    தீபிகா ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்ததால், அதன்மூலம் பழக்கமானவர்கள் யாராவது கொலை செய்தனரா என்ற, கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது தீபிகா உடல் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவில் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவத்தன்று ஒரு பெண்ணும் ஒரு வாலிபரும் சண்டை போட்டுக்கொண்டிருந்ததும் அதை கோவிலுக்கு வந்த சிலர் வீடியோ எடுத்து வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த வீடியோவில் இருப்பது கொலை செய்யப்பட்ட ஆசிரியை தீபிகா என்பது தெரியவந்தது. அவரிடம் ஒரு வாலிபர் கடுமையாக சண்டை போடும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. எனவே அந்த வாலிபர்தான் தீபிகாவை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் தீபிகாவுடன் சண்டை போட்ட அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணிக்யனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ் (22), என்பது தெரிந்தது. ஏற்கனவே தீபிகாவின் குடும்பத்தினரும், நிதிஷ் மீது கொலை குற்றச்சாட்டு கூறி இருந்தனர். கடைசியாக அவர் தான், தீபிகாவிடம் மொபைல் போனில் பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நிதிஷை தேடி வந்தனர். அப்போது விஜயநகரா ஹொஸ்பேட்டில் தலைமறைவாக இருந்த வாலிபர் நிதிஷை, மேலுகோட் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் முதலில் தீபிகாவை கொலை செய்யவில்லை என்று கூறியவர், பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

    தீபிகாவும், நிதிஷும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதாலும், தீபிகாவின் ரீல்ஸ் வீடியோ மூலமும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் அக்கா, தம்பி போன்று பழகி வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது தவறான உறவு இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகித்து உள்ளனர். இதனால் நிதிஷுடன் பேசுவதைத் தவிர்க்கும்படி, தீபிகாவுக்கு குடும்பத்தினர் அறிவுரை கூறினர். இதனால் நிதிஷுடன் பேசுவதை தீபிகா தவிர்த்தார். ஆனால் தன்னுடன் பேசும்படி, நிதிஷ் தொல்லை கொடுத்து வந்து உள்ளார். இதற்கு சம்மதிக்காததால் தீபிகாவை கொலை செய்ய நிதிஷ் முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த 20-ந்தேதி நிதிஷுக்கு பிறந்தநாள். இதையடுத்து அவர் தீபிகாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    பிறந்தநாள் என்பதால் நிதிஷுக்கு சர்ட் எடுத்துக் கொண்டு, அவரை சந்திக்க தீபிகா யோக நரசிம்ம சுவாமி கோவில் மலை அடிவாரத்திற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து நிதிஷுக்கும், தீபிகாவுக்கும் இடையில், தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த நிதிஷ், தீபிகாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில், புதைத்துவிட்டு தப்பி உள்ளார்.

    தீபிகாவை காணவில்லை என்று கணவரும், பெற்றோரும் தேடியபோது, தீபிகாவின் தந்தைக்கு, நிதிஷ் அடிக்கடி போன் செய்து, அக்கா வந்து விட்டாரா?' என்று கேட்டு நாடகம் ஆடியதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×