

திருவனந்தபுரம்:
கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட சில மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநில அரசும், அம்மாநில கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.