search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    7-வது முறையாக ஆட்சியை பிடிக்கிறது- குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி
    X

    7-வது முறையாக ஆட்சியை பிடிக்கிறது- குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி

    • டெல்லி மாடல் ஆட்சியை முன்னிட்டு பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி குஜராத்திலும் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டு இருந்தது.
    • குஜராத் வாக்காளர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இன்று ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 1 மற்றும் 5-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

    இதில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.

    வாக்கு பதிவு சதவீதம் எண்ணிக்கை குறைந்ததால் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் ஏற்பட்டது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் முடிவுகள் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

    இந்தநிலையில் இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் 37 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பிறகு மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டன.

    தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதா கட்சி முன்னிலை பெற்றது. நேரம்செல்ல செல்ல பா.ஜ.க. வெற்றி முகத்துடன் இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. 9 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலை வகித்தது.

    குஜராத்தில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்திலும் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அதை உறுதிப்படுத்துவது போல இன்று தேர்தல் முடிவுகள் அமைந்தன. பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்பது உறுதியான நிலையில் அந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வதில்தான் அரசியல் நிபுணர்களின் ஆர்வம் காணப்பட்டது.

    பா.ஜனதா கட்சி இந்த தடவை 151 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தது. 9.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருந்த நிலையில் 155 இடங்களுக்கு மேல் பா.ஜனதா எட்டிப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா கட்சி 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி நெருக்கத்தில் வந்து சவாலை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பா.ஜனதா பக்கம் சாய்ந்ததால் குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் பலம் குறைந்தது.

    கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 77 இடங்களை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வந்தனர். ஆனால் கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 50 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய போது அந்த அளவுக்கு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்று இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல பல தொகுதிகளில் காங்கிரஸ் பின் தங்கியது.

    காலை 9.30 மணி அளவில் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 55 தொகுதிகளை இழந்து காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

    டெல்லி மாடல் ஆட்சியை முன்னிட்டு பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி குஜராத்திலும் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டு இருந்தது. ஆனால் குஜராத் வாக்காளர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இன்று ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சிக்கு 9 தொகுதிகள் மட்டுமே முன்னிலை கிடைத்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி இரு கட்சிகளும் பெரிய அளவில் வாக்குகளை பெறாததால் பா.ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தடவை அதிக வெற்றியை ருசித்து இருக்கிறது.

    பா.ஜனதா கட்சிக்கு 155-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று முன்னிலை நிலவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் குஜராத் அரசியலில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அதிரடியை நிகழ்த்தி உள்ளதோடு குஜராத் அரசியல் களத்தில் புதிய சாதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு குஜராத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×