search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 4 பேர் கும்பல் வெறிச்செயல்
    X

    மத்திய பிரதேசத்தில் ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 4 பேர் கும்பல் வெறிச்செயல்

    • வீடு திரும்பிய சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார்.
    • திண்டோரி மாவட்ட தலைமை போலீஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    திண்டோரி:

    மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம் பஜாக் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் காரில் வந்தனர். சிறுமியை போகும் வழியில் விட்டுவிடுவதாக கூறி காரில் ஏறக்கூறினர். சிறுமியும் நம்பி காரில் ஏறினார்.

    உடனடியாக காரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டை நோக்கி வேகமாக ஓட்டி சென்றனர். பின்னர் 4 பேரும் சிறுமியை கற்பழித்தனர். அவரது அழுகுரல் கேட்காமல் இருக்க காரில் சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்தனர். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு 4 பேரும் தப்பி சென்று விட்டனர்,

    வீடு திரும்பிய சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதுகுறித்து புகார் அளிக்க சிறுமியின் பெற்றோர் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களின் புகாரை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர்.

    பின்னர் திண்டோரி மாவட்ட தலைமை போலீஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அவர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்தனர்.

    இதுகுறித்து திண்டோரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாத் மார்க்கம் கூறுகையில், "குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கை விசாரிக்க டி.எஸ்.பி. தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

    சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை வாங்க மறுத்து போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டது குறித்து கேட்டதற்கு அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×