பா.ஜ.க.வில் இணைய விரும்பும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்

சொந்த வேலை காரணமாக டெல்லி சென்ற முகுல் ராய், எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததாக தகவல்
முகுல் ராய்
முகுல் ராய்
Published on

கொல்கத்தா:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் பாஜகவில் இணைய விரும்புவதாக கூறியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த தலைவராக இருந்த முகுல் ராய், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் பாஜகவுக்கு தாவினார். 2020ல் பாஜக தேசிய துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திடீரென மமதா பானர்ஜியின் தலைமையை ஏற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக டெல்லி சென்ற முகுல் ராய், எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று கட்சியினரும் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

அதன்பின்னர் நேற்று மாலை செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முகுல் ராய் கூறியதாவது:-

நான் பாஜக சட்டமன்ற உறுப்பினர். நான் பாஜகவுடன் இருக்க விரும்புகிறேன். உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் கட்சி தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த பேச விரும்புகிறேன்.

சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தேன். தற்போது நான் நலமாக உள்ளேன், மீண்டும் அரசியலில் ஈடுபட உள்ளேன். அதேசமயம் திரிணாமுல் காங்கிரசுடன் ஒருபோதும் இணைந்து செயல்படமாட்டேன் என்று 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. இதேபோல் என் மகன் சுபரங்ஷுவும் பா.ஜ.க.வில் சேர வேண்டும், அது அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com