என் மலர்
இந்தியா

இந்தியாவில் 12% குடும்பங்கள் மட்டுமே கார் வாங்க முடியும்.. வருமான தேக்கநிலை என்கிறார் ஜெய்ராம் ரமேஷ்
- மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் இன்று கூறியதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.
- மீதமுள்ள 88 சதவீத குடும்பங்களுக்கு சிறிய கார்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் உயர்மட்ட 12 சதவீத குடும்பங்களால் மட்டுமே கார் வாங்க முடியும் என்றும் இந்த பொருளாதார மந்தநிலைக்கு மூல காரணம் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களின் வருமான தேக்கநிலை என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இந்தியாவில் கார்களை வாங்குவது 12 சதவீத குடும்பங்கள் மட்டுமே என்று சமீபத்தில் மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி. பார்கவா பேசியிருந்தார்.
இதை மேற்கோள் காட்டி எக்ஸ் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "முழு தேசமும் இன்னும் மிகுந்த வேதனையிலும் அதிர்ச்சியிலும் உள்ளது. பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியள்ளது.
அப்படியிருந்தும், இந்நேரத்தில், மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் இன்று கூறியதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் கார்களை வாங்குவது பெரும்பாலும் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே. மீதமுள்ள 88 சதவீத குடும்பங்களுக்கு சிறிய கார்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றின் விற்பனை சுமார் 9 சதவீதம் குறைந்துள்ளது.
2023-2024 மற்றும் 2024-25 க்கு இடையில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சி 2 சதவீதம் மட்டுமே என்றும் பார்கவா சுட்டிக்காட்டினார். வரவிருக்கும் ஆண்டிற்கான வளர்ச்சியும் 1-2 சதவீதம் மட்டுமே இருக்கும்.
இந்த மந்தநிலைக்கு மூல காரணம், இந்தியாவின் பெரும்பான்மையினரின் பரவலான உண்மையான வருமான தேக்கநிலைதான்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.






