என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்

    • தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
    • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

    ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது.

    இதுபற்றி கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் டெல்லியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

    இதுபற்றிய தகவலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு 8.05 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    முன்னதாக டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய இடங்களில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Live Updates

    • 27 Dec 2024 10:54 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    • 27 Dec 2024 10:26 AM IST

      முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா அஞ்சலி செலுத்தினார்.



    • 27 Dec 2024 10:24 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.




    • 27 Dec 2024 10:23 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இதன்பின், மன்மோகன் சிங் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.


       

    • 27 Dec 2024 9:57 AM IST

      மன்மோகன் சிங் மறைவு- வெள்ளை மாளிகை இரங்கல்

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு இந்தியாவுக்கும் உலகத்திற்கும் பெரிய இழப்பு. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும் உலக நாடுகளுடன் நட்புறவையும் உருவாக்க அவ செய்த பங்களிப்புகள் மறக்க முடியாதவை என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • 27 Dec 2024 9:12 AM IST

       முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - தமிழ்நாடு அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

    • 27 Dec 2024 8:59 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

    • 27 Dec 2024 8:20 AM IST

      முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து தெலுங்கானா செயலகம், டேங்க் பண்ட் மற்றும் ஜிஹெச்எம்சி கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.



    • 27 Dec 2024 7:58 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

    • 27 Dec 2024 7:56 AM IST

      முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - இந்திய கிரிக்கெட் வீரர்கள் மரியாதை

      பாக்ஸிங் டே டெஸ்ட்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் கருப்பு பட்டை அணிந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர். 

    Next Story
    ×