என் மலர்
இந்தியா

கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 8 பெண்கள் பலி
- புனேவின் ஹெத் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில், கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் வாகனம் மலைப் பகுதியில் இருந்து கவிழ்ந்ததில் 8 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர்.
புனேவின் ஹெத் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு நேற்று மாலை புனேவின் பபல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பக்தர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர்.
மலைப்பாங்கான பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த பயணிகளில் 8 பெண் பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல், மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.






