என் மலர்
இந்தியா

இண்டிகோ விமான சேவை ரத்து எதிரொலி: புதுமண தம்பதி இல்லாமல் நடந்த வெட்டிங் ரிசப்ஷன்
- டிசம்பர் 3ம் தேதி ஹூப்பள்ளியில் வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
- டிசம்பர்-2 காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர் மேகா க்ஷீரா சாகர். இவர் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கிராம் தாஸ் என்பவரை காதலித்து நவம்பர் 23-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் 3ம் தேதி மேகாவின் சொந்த ஊரான ஹூப்பள்ளியில் ரிசப்ஷனுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
ரிசப்ஷனில் கலந்து கொள்வதற்காக மணமக்கள் இருவரும் புவனேஸ்வரிலிருந்து பெங்களூருவிற்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் டிசம்பர் 2ம் தேதி விமானத்தில் முன்பதிவு செய்தனர். அதேபோல், சில உறவினர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, டிசம்பர் 2-ம் தேதி காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர். அதன்பின், விமானம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தனர். ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமானங்கள் ரத்தானது என விமான நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், விமானம் ரத்தானதால் மணமக்கள் ஹூப்பளி செல்ல முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி புவனேஸ்வரில் இருந்தபடியே வீடியோ காலில் பங்கேற்றனர். ஹூப்பள்ளியில் உறவினர்கள் இருந்தபடி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஹூப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்த மேடையில், மணமக்களுக்குப் பதிலாக மணமகளின் பெற்றோர் அமரவைக்கப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.






