என் மலர்
இந்தியா

கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சுற்றுலா தலங்கள் மூடல்
- கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்ட கலெக்டர்கள், இரவு நேர பயணங்களுக்கும் தடை விதித்துள்ளனர்.
- பத்தனம் திட்டாவில் வருகிற 1-ந் தேதி வரை மலைப்பகுதிகளுக்கு இரவு பயணம் செய்ய அனுமதி இல்லை.
திருவனந்தபுரம்:
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக விடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு அருகில் வடமேற்கு வங்காள விரிகுடாவில் தற்போது அமைந்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு நோக்கி நகரும் போது 24 மணி நேரத்திற்குள் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்றும், இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை (30-ந் தேதி) திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும், மறுநாள் (31-ந் தேதி) திருவனந்தபுரம், கொல்லம், பததனம் திட்டா, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்ட கலெக்டர்கள், இரவு நேர பயணங்களுக்கும் தடை விதித்துள்ளனர். பத்தனம் திட்டாவில் வருகிற 1-ந் தேதி வரை மலைப்பகுதிகளுக்கு இரவு பயணம் செய்ய அனுமதி இல்லை. மூணாறு இடைவெளி சாலை மற்றும் நேரியமங்கலம்-அடிமாலி பகுதியில் நாளை (30-ந் தேதி) வரை பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.






