search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    X

    பாராளுமன்ற தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் இயல்புக்கு அதிகமான அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.
    • வாக்குப்பதிவு தினத்தன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலமாகும்.

    இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவும் சமீபத்திய சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளது. சில இடங்களில் வெப்ப அலையும் வீசும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கோடை காலம் தொடங்கியிருக்கும் நிலையில், வெயில் கொடுமை இப்போதே வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கே வெயில் 'சுள்' என்று அடிக்கத்தொடங்கியது. மதியம் 2 மணிக்கு வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது.

    இதில் மேலும் பேரிடியாக, நாடு முழுவதும் ஜூன் வரை கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியிருப்பதாவது:-

    ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியா பகுதிகளில் இதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    மேற்கு இமயமலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலை முதல் இயல்பை விட குறைவான அதிகபட்ச வெப்பநிலை இருக்கலாம்.

    இந்த காலகட்டத்தில் சமவெளி பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கும்.

    வழக்கமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 முதல் 8 நாட்கள் வரை வெப்ப அலை வீசும். ஆனால் இந்த முறை 10 முதல் 20 நாட்கள் வெப்ப அலை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது,

    குஜராத், மத்திய மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகள் வெப்ப அலையின் மோசமான தாக்கத்தை அனுபவிக்கும்.

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் இயல்புக்கு அதிகமான அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். மத்திய தென்னிந்தியாவில் இதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்த மாதத்தில் மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலை முதல் இயல்பை விட குறைவான அதிகபட்ச வெப்பநிலை வரை இருக்கலாம்.

    இதைப்போல மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும், வட சமவெளி மற்றும் தென்னிந்தியாவை ஒட்டிய பகுதிகளிலும் வழக்கமான வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கலாம்.

    இந்த பகுதிகளில் வழக்கமான வெப்ப அலை நாட்களை (1 முதல் 3 நாட்கள்) விட அதிகமான (2 முதல் 8 நாட்கள் வரை) நாட்கள் எதிர்பார்க்கப்படுகிறது,

    இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.

    வாக்குப்பதிவு தினத்தன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் போன்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதிகபட்ச வெப்பம் மக்களை வாட்டி வதைப்பதுபோல், தேர்தல் சூடு அரசியல் கட்சிகளை கலங்கடித்துக்கொண்டு இருக்கிறது.

    Next Story
    ×