search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
    X

    வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

    • சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்படைந்தன.
    • மத்திய அரசு நிவாரண நிதி தர மறுப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

    கடந்த ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் மழை கொட்டித்தீர்த்தது. தாமிரபரணி ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரையோர கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதித்தன.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வடிய பல நாட்கள் ஆகின. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிப்பு குறித்து விரிவாக கடிதம் எழுதி சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

    தற்போது மக்களவை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின்போது வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    நேற்று வேலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது இது தொடர்பாக மத்திய அரசு மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×