என் மலர்
இந்தியா

ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு- லைவ் அப்டேட்ஸ்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல்.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதேபோல் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவுகள் தொடங்கின.
அதேபோல் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வாக்குப்பதிவும் தொடங்கியது.
விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். முதன்முறையாக அவர் அரசியலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
வருகிற 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Live Updates
- 13 Nov 2024 11:38 AM IST
சரைக்கேலா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் "அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும். Gogo Didi திட்டம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது" என்றார்.
- 13 Nov 2024 10:32 AM IST
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிகாவ்ன் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. அம்மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. தலைவருமான பசவராஜ் பொம்பை ஷிகாவ்னில் அமைக்கப்பட்ட வாக்கு மையத்திற்கு வந்த வாக்களித்தார். இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அவரது மகன் பரத் பொம்பை நிறுத்தப்பட்டுள்ளார்.
- 13 Nov 2024 10:07 AM IST
வயநாடு மக்கள் என்மீது காட்டிய அன்பை, நான் அவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் வகையிலும், அவர்களுக்காக பணியாற்றும் வகையில், அவர்களுடைய பிரதிநிதியாக இருக்கும் வகையில் எனக்கு வாய்ப்பளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். அனைவரும் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
- 13 Nov 2024 10:01 AM IST
காலை 9 மணி வரை 43 சட்டமன்ற தொகுதிகளில் 13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 13 Nov 2024 9:11 AM IST
ராஞ்சி, ஜார்க்கண்ட்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் கூறுகையில், "இந்த 5 ஆண்டுகளில் ஜார்ககண்ட் மக்கள் ஊழலால் சலிப்படைந்துள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாஜக இங்கு வெற்றி பெறும். ஜார்க்கண்ட் தர்மசாலாவா?, அகதிகள் மையமா? வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் இங்கு அழைக்கப்படுகிறார்கள்.
நவம்பர் 24 முதல் வங்கதேச ஊடுருவல்காரர்கள் எல்லையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தீர்மானம் நிறைவேற்றும். நேற்று இங்கு சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா 'இந்துக்கள் கிளர்ச்சியாளர்கள்' என்று கூறினார். வாக்கு வங்கிக்காக இந்து மதத்தை தவறாகப் பயன்படுத்துவது அவர்களின் பாரம்பரியம்" என்றார்.
- 13 Nov 2024 9:06 AM IST
ஜார்ககண்ட்: ராஞ்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிபி சிங் வாக்களித்த பின், "நான் எனது ஜனநாயக உரிமையை செயல்படுத்தியுள்ளேன். இது உரிமையும் கடமையும் ஆகும். ஒவ்வொரு நபரும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.
- 13 Nov 2024 9:04 AM IST
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஜேஎம்எம் தலைவர் மனோஜ் பாண்டே கூறுகையில், "பாஜகவின் விரக்தியும், பயமும் அவர்கள் தோற்றுவிட்டதை காட்டுகிறது. ஜார்க்கண்ட் மக்கள், ஹேமந்த் சோரனுடன் இணைந்து வளர்ச்சியுடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். வெறுப்படை பரப்புவர்கள் கூட. நாங்கள் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்போம்" என்றார்
- 13 Nov 2024 8:01 AM IST
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில் ஜனநாயக திருவிழாவில் மக்கள் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.







