search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீன விசா பணமோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
    X

    சீன விசா பணமோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்

    • சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
    • கார்த்தி சிதம்பரம் மீதான 3-வது பண மோசடி வழக்கு இதுவாகும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    பஞ்சாப்பில் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த டி.எஸ்.பி.எல். நிறுவனம் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்தாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் நிராகரித்து இருந்தார். சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி ரோஸ் அவின்யூ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம், அவரது உதவியாளர் எஸ்.பாஸ்கரராமன் மற்றும் ஒரு சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட 6 பேருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது. அவர்கள் அனைவரும் அடுத்த மாதம் 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது. அவர் மீதான 3-வது பண மோசடி வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×