

புதுடெல்லி:
பீகார் மாநில காங்கிரசார் கடந்த 10-ம் தேதி தங்களது எக்ஸ் வலைதளத்தில் 36 வினாடி ஓடும் ஒரு வீடியோவை பகிர்ந்தது. ஏ.ஐ. வடிவிலான அந்த வீடியோவில் பிரதமரின் அரசியல் பயணத்தை, அவரது தாயார் கண்டிப்பது போன்று பிரதமர் கனவு காண்பதாக அமைந்துள்ளது.
இந்த வீடியோ பிரதமர் மோடியின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
ஆனால், இந்த வீடியோவில் யாருக்கும் அவமரியாதை இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், டெல்லி வடக்கு அவென்யூ போலீஸ் ஸ்டேஷனில் பா.ஜ.க. டெல்லி தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சங்கேத் குப்தா, காங்கிரஸ் கட்சி மீது புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், பிரதமர் மோடி மற்றும் அவரது தாயின் கண்ணியத்தைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
புகாரின்பேரில், பெண்களின் கண்ணியத்தை சீர்குலைத்ததாகக் கூறி, 18(2), 336(3), 336(4), 340(2), 352, 356(2) மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, பீகாரில் நடந்து வரும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான யாத்திரையின்போது, பிரதமர் மோடி, அவரது இறந்த தாயாரை குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் அவதூறு பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.