என் மலர்
இந்தியா

VIDEO: மகாராஷ்டிராவில் மராத்தி கற்க மறுத்த தொழிலதிபரின் அலுவலகம் சூறையாடல்
- இந்தி பேசுபவர்களை நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர்.
- நான் மராத்தி கற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று ராஜ் தாக்கரேவை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இதனிடையே மகாராஷ்டிராவில் மராத்தி பேசாமல் இந்தி பேசுபவர்களை நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் சுஷில் கெடியா என்பவர் தனது எக்ஸ் பதிவில், "நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறேன். எனக்கு மராத்தி தெரியாது. நான் மராத்தி கற்றுக்கொள்ளவும் மாட்டேன்" என்று ராஜ் தாக்கரேவை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
மராத்தி கற்க மாட்டேன் என்று கூறிய தொழிலதிபர் சுஷில் கெடியாவின் கெடியோனோமிக்ஸ் அலுவலகத்தை மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தொண்டர்கள் சூறையாடினர்.
அலுவலகத்தின் மீது கற்களை வீசி நவநிர்மான் சேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஜெய் மகாராஷ்டிரா என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனையடுத்து, மராத்தி கற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதற்கு தொழிலதிபர் சுஷில் கெடியா தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.