search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற முடக்கம் தீர எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் - அமித்ஷா
    X

    உள்துறை மந்திரி அமித்ஷா

    பாராளுமன்ற முடக்கம் தீர எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் - அமித்ஷா

    • ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் தினமும் முடங்கி வருகிறது.
    • எதிர்க்கட்சிகள் முன் வந்தால் பாராளுமன்ற முடக்கத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் முதல் 5 நாட்களும் குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் தினமும் முடங்கி வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற முடக்கத்துக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா யோசனை தெரிவித்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் நடந்த 'இந்தியா டுடே' மாநாட்டில் பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    வெறும் ஆளுங்கட்சி அல்லது வெறும் எதிர்க்கட்சியால் மட்டும் பாராளுமன்ற அமைப்பு இயங்காது. ஏனெனில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் பேசவேண்டும். எனவே பாராளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பும் சபாநாயகர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்காக அவர்கள் (எதிர்க்கட்சி) 2 அடி முன்வந்தால், நாங்களும் 2 அடி முன்னோக்கிச் செல்வோம். இதன்மூலம் பாராளுமன்றம் இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் எதையும் செய்யாமல் வெறும் செய்தியாளர் சந்திப்பு மட்டும் நடத்தினால் எந்தப் பலனும் இருக்காது.

    இந்த விவகாரத்தில் எங்கள் முயற்சிகள் இருந்தபோதும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான எந்தப் பரிந்துரையும் வரவில்லை. அப்படியிருக்க, நாங்கள் யாரிடம் பேச முடியும்? அவர்கள் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் வேண்டும் என கோஷமிடுகிறார்கள். பாராளுமன்றத்தில் முழுமையான பேச்சு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் பாராளுமன்றத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டே விவாதங்கள் நடத்தப்படும். நீங்கள் சாலையில் பேசுவது போல பாராளுமன்றத்தில் பேசமுடியாது. இந்த அடிப்படை புரிதலே அவர்களுக்கு இல்லையென்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்?

    சில பிரச்சினைகள் அரசியலுக்கு மேற்பட்டவை. இந்திரா காந்தி கூட உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசுவதற்கு மறுத்தார். வெளிநாடுகளிலும், பிற நாடுகளின் பாராளுமன்றங்களிலும் இந்தியா குறித்து அவதூறு பேசுவதா? இதற்கு காங்கிரஸ் பதிலளிக்கும் என நான் நம்புகிறேன்.

    சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகின்றன என குறிப்பிட்டார்.

    Next Story
    ×