search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலியல் பலாத்கார முயற்சியில் இளம்பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய கும்பல்
    X

    பாலியல் பலாத்கார முயற்சியில் இளம்பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய கும்பல்

    • சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.
    • போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    போபால்:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு, சூரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயிலில் 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயது மதிக்கத்தக்க அவரது ஆண் நண்பர் ஒருவரும் சென்றார்.

    அவர்கள் இருவரும் ஜார்க்கண்டில் இருந்து சூரத்துக்கு சென்றபோது இணைப்பு ரெயிலை தவறவிட்டதால் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இரவு 10 மணியளவில் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுபெட்டியில் ஏறினார்கள். அந்த ரெயிலில் சுமார் 60 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில் குவாலியரை தாண்டி ரெயில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் அந்த இளம்பெண்ணின் ஆடைகளை பிடித்து கிழித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அவருடன் வந்த நண்பர் தடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசினார்கள். சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

    ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். அவரது நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இளம்பெண்ணால் எழுந்து நடக்க முடியவில்லை.

    இதையடுத்து அவரது நண்பர் கிழிந்த ஆடைகளால் பெண்ணின் உடலை மூடி, மருத்துவ உதவி பெறுவதற்காக அடர்ந்த காட்டில் கொட்டும் மழையில் 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்றார். ஆனால் 2 கிராமங்களில் இருந்து மக்களிடம் அவர் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை.

    இதையடுத்து அவர் 3-வதாக ஒரு கிராமத்துக்கு சென்று உதவி கேட்டார். அந்த கிராமத்தில் வசித்த ஒரு வயதான தம்பதிகள் அவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அந்த பெண்ணுக்கு ஒரு சேலையை கொடுத்து அணிவித்தனர்.

    பின்னர் அவரது காயங்களுக்கு மருந்து தடவினார்கள். அதன்பிறகு அந்த பெண்ணும், அவரது நண்பரும் மருத்துவமனைக்கு செல்லவும் உதவினார்கள். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த 19-ந்தேதி நடந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×