என் மலர்
இந்தியா

ராஜஸ்தான்: ரசாயனத்தை மதுவென கருதி குடித்த 4 பேர் பலி
- ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
- குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலை மோசமடைந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாத்திரம் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்தனர்.
வேலை முடிந்ததும் அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என நினைத்து, அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
நேற்று இரவு அந்த ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது. குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலையும் மிக மோசமடைந்தது. இதில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பதாமி தேவி என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயர சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ரசாயனத் திரவத்தை மது என நினைத்து குடித்ததே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது.






