search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

    அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் அருண் குமார் நேற்று கூறியதாவது:-

    விவசாயிகளின் ரெயில் மறியல் தொடர்பாக நாங்கள் உளவுத்தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகிறோம். இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் வேறு சில பகுதிகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்த பகுதிகளில் கூடுதலாக 20 கம்பெனி (சுமார் 20 ஆயிரம் வீரர்கள்) ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினரை பணியில் அமர்த்தி உள்ளோம்.

    இந்த போராட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். அத்துடன் கட்டுப்பாட்டு அறையும் திறக்க முடிவு செய்துள்ளோம். அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அருண் குமார் தெரிவித்தார்.
    Next Story
    ×