search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பரிசீலனை

    கொரோனாவுக்கு எதிரான ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பரிசீலனை நடந்து வருவதாக தேசிய தடுப்பூசி நிபுணர் குழு தலைவர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனாவுக்கு எதிரான ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கவும், 3-ம் கட்ட மனித பரிசோதனையை நடத்தவும் பரிசீலனை நடந்து வருவதாக தேசிய தடுப்பூசி நிபுணர் குழு தலைவர் டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார்.

    உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல நாடுகள் கணிசமான வெற்றியையும் பெற்று தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

    அந்த வகையில் ரஷியாவின் கமாலயா நிறுவனம் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. 3-வது கட்ட மனித பரிசோதனைக்கு தயாராகி வரும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் தேசிய கொரோனா தடுப்பூசி நிபுணர் குழு தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவும், அதன் 3-வது கட்ட பரிசோதனையை இங்கு நடத்தவும் பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் ரஷியா கேட்டுக்கொண்டுள்ளது. எனவே இந்த இரு வழிகளிலும் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ரஷியாவின் இந்த பரிந்துரையை பல்வேறு இந்திய நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. மற்ற நிறுவனங்கள் ரஷிய நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கின்றன. அவையும் இது தொடர்பாக விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்கள்.

    மிகவும் சிறப்புக்குரிய நட்பு நாட்டில் இருந்து வந்துள்ள இந்த கூட்டு வாய்ப்புக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளித்து உள்ளது. உயர்ந்த தரத்திலான தடுப்பூசிகளை மிகப்பெரிய அளவில் தயாரிக்க இந்தியாவால் முடியும். இது ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் சிறப்பானதாகும்.

    இவ்வாறு டாக்டர் வி.கே.பால் கூறினார்.

    இதற்கிடையே கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் ராணுவ அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கி வரும் ராணுவ மருந்து நிறுவனம் மரபணு ரீதியான தடுப்பூசி ஒன்றை தயாரித்து இருந்தது. இனக்கலப்பு முறையிலான இந்த தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

    நாட்டிலேயே முதல் முறையாக, கடந்த மாதம் காப்புரிமை பெற்றுள்ள இந்த தடுப்பூசியால் வைரஸ் பிறழ்வு நிலையையும் சரி செய்ய முடியும் என இந்த தடுப்பூசி ஆய்வு குழு நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக குழுவின் தலைவர் சென் வெய் கூறியதாவது:-

    இந்த தடுப்பூசி தயாரிப்புக்கு நிபுணர்கள் எடுத்துக்கொண்ட வைரசின் மரபணு குறைந்தபட்ச பிறழ்வுத்தன்மையே கொண்டது. தற்போது வரை கொரோனா வைரசின் அனைத்து பிறழ்வு தன்மையையும் இந்த தடுப்பூசியால் தடுக்க முடியும்.

    எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட மரபணு மாற்றமடைந்து தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மையை பலவீனப்படுத்தினாலும், அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்த முடியும். அதேநேரம் வைரஸ் பிறழ்வுத்தன்மையை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஒரு தடுப்பூசியை உருவாக்க சீனாவால் முடியும். இது கம்ப்யூட்டர் சாப்ட்வேரை மேம்படுத்துவது போலத்தான்.

    இந்த தடுப்பூசியின் செயல்திறன் காலம் குறித்த போதுமான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லையெனினும், மார்ச் மாதம் முதற்கட்ட பரிசோதனையில் பங்கேற்றவர்கள் தற்போதும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கின்றனர்.

    இவ்வாறு சென் வெய் கூறினார்.
    Next Story
    ×