search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி, பிரதமர்
    X
    ஜனாதிபதி, பிரதமர்

    தேசிய கல்வி கொள்கை பற்றிய கவர்னர்கள் மாநாடு - ஜனாதிபதி, பிரதமர் இன்று உரையாற்றுகிறார்கள்

    புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து இன்று நடைபெறும் கவர்னர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கைக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும் இந்த புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.

    புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு புதிய கல்வி கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

    புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகமும், பல்கலைக்கழக மானிய குழுவும் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    இந்த நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ‘உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில கவர்னர்கள், கல்வி மந்திரிகள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்கள்.

    இந்த தகவலை பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. அதில் 34 ஆண்டுகளுக்கு பிறகு 21-ம் நூற்றாண்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் நாட்டில் கல்வி முறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×