search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டாக்டர் எஸ்.கே.ஸ்டாலின்
    X
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டாக்டர் எஸ்.கே.ஸ்டாலின்

    டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை சோதனை வெற்றி- அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

    பிளாஸ்மா சிகிச்சையால் டெல்லியில் 4 கொரோனா நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தடுப்புக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, அவற்றை பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை ஆகும். 

    கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது. டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதன்மூலம் டெல்லியில் 4 நோயாளிகளின் உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கல்லீரல், பைலரி சயின்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் எஸ்.கே.ஸ்டாலின் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களில், எல்.என்.ஜே.பி  மருத்துவமனையில் 4 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை அளிக்கப்பட்டது. இப்போது வரை அதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

    எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் உள்ள தீவிர நோயாளிகளில் குறிப்பிட்ட சிலருக்கு பிளாஸ்மா சோதனையை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த 2-3 நாட்களில், நாங்கள் அதிகமான சோதனைகளை நடத்துவோம். பின்னர் அனைத்து தீவிர நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சையை அளிப்பதற்கு அடுத்த வாரம் அனுமதி பெறுவோம். எனவே கொரோனாவில் இருந்து மீண்ட மக்கள், ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் எஸ்.கே.ஸ்டாலின் பேசும்போது, ‘பிளாஸ்மா சிகிச்சை 4 நோயாளிகளுக்கு நல்ல முடிவை தந்திருக்கிறது. எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் எங்களிடம் உள்ள மற்ற 2-3 நோயாளிகளுக்கு ரத்தம் மற்றும் பிளாஸ்மா தயாராக உள்ளது. இன்று அவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க உள்ளோம்’ என்றார்.
    Next Story
    ×