search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடை (கோப்புப்படம்)
    X
    ரேசன் கடை (கோப்புப்படம்)

    ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்

    ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு திட்டத்தை முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் சுமார் 79 கோடி பேர் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.

    இவர்களில் சுமார் 7 கோடி பேர் வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி சென்றுள்ள சாதாரண ஏழை-எளிய மக்கள் ஆவார்கள்.

    அத்தகைய ஏழை தொழிலாளர்கள் பிழைக்க செல்லும் இடங்களில் அதிக விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

    அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு, “ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” என்ற புதிய திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த திட்டத்தின்படி பல்வேறு மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக வேறு மாநிலத்திற்கு சென்றிருப்பவர்கள் தங்களது குடும்ப அட்டையை பயன்படுத்தி ரேசன் கடைகளில் குறைந்த விலையில் உணவு தானியங்களை பெற முடியும்.

    இந்த திட்டம் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து மாநிலங்களில் உள்ள பொதுவிநியோக திட்ட பயனாளிகளின் தொகுப்பு மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட ஒரு சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் தங்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை பெற முடியும். இடம் பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முதலில் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் சோதனை அடிப்படையில் நடத்தி பார்க்கப்பட்டது.

    அதில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து “ஒரே நாடு- ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை நாடு முழுவதும் விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்

    அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதம் இந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வருவதற்கான பணிகள் நடப்பதாக மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து இருந்தார். இதற்கான உபகரணங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் “ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை முன்னதாகவே அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய நுகர்வோர் நலத்துறை மற்றும் உணவு பொது விநியோக திட்ட துறைகள் இணைந்து செய்து வருகின்றன.

    முதல் கட்டமாக அடுத்த மாதம் இந்த திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியபிர தேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 4 கோடி ஏழை-எளிய தினசரி கூலித்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

    ஜூன் மாதத்துக்கு பிறகு இந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக சில மாநிலங்கள் கருதுகின்றன. தங்கள் மாநில மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அந்த மாநிலங்களில் உள்ளது.

    தமிழ்நாட்டில் இன்னமும் இந்த திட்டத்துக்கான பணிகள் நிறைவு பெறவில்லை. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ரேசன் கார்டுகளை குடும்பத்தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டியது உள்ளது. தமிழ்நாட்டில் இன்னமும் இந்த பணி முடியவில்லை.

    எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கையின்போது தமிழ்நாடும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள் வழக்கம்போல உணவுப் பொருட்களை பெறலாம். அதில் பாதிப்பு வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இடம்பெயரும் தொழிலாளர்கள் அதிகளவு எந்த பகுதிக்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த திட்டத்தில் உள்ளது. இந்த திட்டம் மூலம் போலி ரேசன் கார்டு அட்டைகளை ஒழிக்க முடியும்.

    ஒரு மாநிலத்தில் பதிவு செய்துள்ள பயனாளி மற்றொரு மாநிலத்தில் உணவுப் பொருட்களை வாங்கும் போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மட்டுமே உணவு பொருட்களை பெற முடியும். மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு வழங்கும் நலத்திட்டத்தின் படியான உணவுப் பொருட்களை பெற முடியாது.

    தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவச திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இலவச திட்டங்களை வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் பெற இயலாது.

    என்றாலும் ரேசன் கார்டுகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மத்திய அரசு தனது புதிய திட்டங்களை இந்த பொதுவிநியோகம் மூலம் அமல்படுத்த முயற்சி செய்யும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 5½ லட்சம் நியாய விலைக்கடைகள் உள்ளன.

    இந்த கடைகள் மூலம் மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×