search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி தொடர்ந்து பிடிவாதம் - மேலிட தலைவர்கள் 5வது நாளாக சமரச முயற்சி
    X

    ராகுல்காந்தி தொடர்ந்து பிடிவாதம் - மேலிட தலைவர்கள் 5வது நாளாக சமரச முயற்சி

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பிடிக்க முடியவில்லை.

    இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். காரிய கமிட்டி கூட்டத்தில் அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ராகுல்காந்தியின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

    ராகுல்காந்தி அதற்கு சம்மதிக்கவில்லை. ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக இருந்தார். நேரு குடும்பத்துக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக தேர்வு செய்யலாம். நான் சாதாரண தொண்டனாக இருந்து கொள்கிறேன் என்று ராகுல்காந்தி கூறினார்.

    அதன்பிறகு ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்களும் ராகுல்காந்தியை சமரசம் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட் கிழமையும் ராகுல்காந்தி யாரிடமும் பேசவில்லை. அவரை சமரசம் செய்ய சென்ற மூத்த தலைவர்களை அவர் சந்திக்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில தலைவர்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநில காங்கிரஸ் ஆட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ராகுல்காந்தி அவர்களிடம் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் அக்கறை காட்டாத சில மூத்த தலைவர்கள் பற்றி புகார் தெரிவித்ததுடன் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். தனது ராஜினாமாவை திரும்பபெற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.



    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று டெல்லி துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தி தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜிவாலா ஆகியோரும் சென்று ராகுல் காந்தியை சந்தித்து சமரசம் செய்து ஆலோசனை நடத்தினார்கள்.

    அவர்களிடம் ராகுல் காந்தி 3 மாநிலங்களில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் என்று கூறினார். அத்துடன் ராஜினாமா முடிவை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது. இது கட்சிக்கு முக்கியமான காலகட்டம். ராகுல்காந்தி ராஜினாமா செய்வது காங்கிரஸ் கட்சிக்குள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அவர் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பது நல்லது என்று கருத்து கூறினார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமா முடிவை கைவிடுமாறு கூறினார்.

    ஆனாலும் ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். அவரது மனநிலை மாறவில்லை. இன்று 5-வது நாளாக ராகுல் காந்தியின் பிடிவாதம் தொடருகிறது.

    ராகுல் காந்தியை சமரசம் செய்வதற்காக ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு மாதிரியான யோசனைகளை தெரிவித்து வருகிறார்கள். ராகுல்காந்தி தலைவர் பதவியிலேயே நீடிக்கட்டும். மேலும் செயல் தலைவர் பதவியை உருவாக்கி செயல் தலைவர்களாக சிலரை நியமிக்கலாம். தலைவர் பொறுப்பை ராகுல் கவனித்தால் கட்சியின் மற்ற நடவடிக்கைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலக வேண்டாம் என்று யோசனை தெரிவித்தனர். ஆனால் அதற்கும் ராகுல் காந்தி உறுதியான பதிலை சொல்லவில்லை.

    ராகுல்காந்தியை நேற்று சந்தித்து பேசிய மூத்த தலைவர்கள் சிலர் ராகுல் தொடர்ந்து 3 மாதங்கள் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். சிலர் புதிது புதிதாகவும் கருத்து சொல்லி வருகிறார்கள்.

    வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி விரைவில் கேரள மாநிலம் வயநாடு செல்ல இருக்கிறார். அவர் வயநாடு செல்வதை பொறுத்து மீண்டும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் காரிய கமிட்டி கூடுமா என்று தெரியவில்லை. அதற்கு பதிலாக ராகுல்காந்தியை சமரசம் செய்வதிலேயே மூத்த தலைவர்கள் பலர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் அவர் சமரசம் ஆகாமல் தொடர்ந்து பிடிவாதமாகவே இருக்கிறார்.

    இதற்கிடையே பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் அவர் அந்த பதவியில் நீடித்த படியே கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×