search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைமையில் ஆட்சி: ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
    X

    காங்கிரஸ் தலைமையில் ஆட்சி: ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

    காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க இன்று காலை ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவை எதிர்க்கும் மாநில கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளன.

    இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில கட்சிகள் அனைத்தையும் காங்கிரசுடன் கை கோர்க்க வைக்க கடந்த மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இடையில் அவரது பேச்சுவார்த்தையில் சற்று தொய்வு ஏற்பட்டது.

    தற்போது அவர் மீண்டும் தனது வியூகத்தை தீவிரப்படுத்த தொடங்கி இருக்கிறார். நேற்று அவர் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினார். பிறகு ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுகள் வெளியானதும் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    மாநில கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் தங்கள் அணிக்கு உடனடியாக வரும் என்றும் அவர்கள் ஆலோசித்தனர். அதன் அடிப்படையில் அடுத்தக் கட்டமாக எந்தெந்த தலைவர்களை சந்தித்து பேச வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.


    இன்று பிற்பகல் பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். அகிலேஷ் யாதவ், மம்தாபானர்ஜி ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் திரள செய்ய வேண்டும் என்ற இலக்குடன் சந்திரபாபு நாயுடு முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    மாநில அரசியலில் எதிரியாக உள்ள தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவையும் அவர் அழைத்து உள்ளார். இதன் மூலம் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு சந்திரபாபு நாயுடு அனைத்து வகையிலும் தன்னை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிகிறது.

    Next Story
    ×