search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உணவூட்டிய பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு மழை
    X

    வீடியோ - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உணவூட்டிய பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு மழை

    காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் பசியால் தவித்தபோது மத்திய துணை ராணுவப்படை வீரர் உணவூட்டும் வீடியோ வைரலாகிவரும் வேளையில் அவருக்கு பாராட்டுகளும் குவிகின்றது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார்.

    அப்போது எதிரே உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்திருக்கும் சிறுவன் அவரைப் பார்த்து தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டவே மனமிரங்கிய இக்பால் சிங், சிறுவனை நோக்கிச் சென்றார்.

    தனது டிபன் பாக்ஸை அந்த சிறுவனிடம் நீட்டியபோது அதை வாங்கி சாப்பிட முடியாதவாறு கைகள் செயல்படாத நிலையில் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த இக்பால் சிங், தனது கையால் அவனுக்கு உணவூட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, வாயை கழுவிவிடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.



    இதை கண்ட காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் இக்பால் சிங்கின் மனிதநேயத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

    பிறருக்கு உதவ வேண்டும் என்ற கொள்கை எங்களது பயிற்சிக்காலத்தில் கற்றுத்தரப்பட்டது. அதன்படி அந்த சிறுவனுக்கு நான் உதவி செய்தேன். இந்த சம்பவம் வீடியோவாகி இப்படி பரவும் என்று எதிர்பார்த்து நான் அப்படி செய்யவில்லை என்று கூறும் இக்பால் சிங்குக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அளித்து கவுரவிக்க மத்திய துணை ராணுவப்படை உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    Next Story
    ×