search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
    X

    டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

    டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம் என்று தீர்ப்பளித்தது.



    இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் அவர் அமைச்சரவையுடன் இணக்கமாக செயல்படவேண்டும் என்று கூறினர். நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த தீர்ப்பு மிக முக்கியமானது என்பதால் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும், தனித்தனியாக தீர்ப்பை வாசித்தனர்.  

    நீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில், காவல்துறையை துணை நிலை ஆளுநரே கவனிப்பார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர்கள் மற்றும் செயலாளர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். 

    ‘விசாரணைக் கமிஷன் அமைப்பது மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்பதால் முதல்வரால் அமைக்க முடியாது. இணை செயலாளர் மற்றும் அதற்கு மேல் அதிகாரம் உள்ள அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே உள்ளது. இணை செயலாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அதிகாரிகளை மாநில அரசு நியமிக்கலாம். மின்சாரத்துறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்’ என்றும் நீதிபதி சிக்ரி தெரிவித்தார்.

    மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் தனது தீர்ப்பில், சேவைகள் பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மத்திய அரசின் வரம்பிற்குள் தான் வருவார்கள் என்றும், அவர்களை நியமிக்கவோ மாற்றவோ துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.

    சேவைகள் பிரிவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அந்த பிரிவு மட்டும் 3 நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal

    Next Story
    ×