என் மலர்
செய்திகள்

நேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்
இந்தியாவில் இருந்து 15 வயதுக்கு குறைவானவர்களும் 65 வயதை கடந்தவர்களும் நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு செல்ல இனி ஆதார் அட்டை போதுமானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #useAadhaar #IndiansvisitNepal #IndiansvisitBhutan
புதுடெல்லி:
இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடான் நாட்டு எல்லைப்பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்குவந்து வேலை செய்துவிட்டு திரும்பி செல்கின்றனர். அதேபோல் இந்தியாவில் இருந்தும் இந்த நாடுகளுக்கு நம்மவர்கள் தங்குதடையின்றி சென்று வருகின்றனர்.
சுமார் 1850 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தியா-நேபாளம் எல்லைப்பகுதி இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களையொட்டி அமைந்துள்ளது. நேபாளத்தில் தற்போது சுமார் 6 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து இந்நாடுகளுக்கு செல்வதற்கு விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அடுத்த 6 மாதங்கள்வரை செல்லுபடியாகத்தக்க வகையில் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இதுதவிர, இந்திய அரசின் சுகாதார காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை துணை ஆவணமாக கொண்டு செல்ல வேண்டி இருந்தது.

இந்நிலையில், இந்நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து 15 வயதுக்கு குறைவானவர்களும் 65 வயதை கடந்தவர்களும் இனி சென்று வருவதற்கு ஆதார் அட்டை மட்டுமே போதுமானது என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
நேபாளம்-இந்தியா இடையே 15 வயதுக்கும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் சென்றுவர அவர்களின் பள்ளி தலைமையாசிரியர்கள் அளிக்கும் சான்றிதழ் கடிதங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #useAadhaar #IndiansvisitNepal #IndiansvisitBhutan
Next Story






