search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவல் நீட்டிப்பு
    X

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவல் நீட்டிப்பு

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சி.பி.ஐ. விசாரணை காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில்  துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

    துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி  கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, மைக்கேலை மேலும் 5 நாள் (15-ம் தேதிவரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இந்த கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரது சார்பில் அல்ஜோ ஜோசப் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ரோஸ்மேரி பாட்ரிசி ஆகியோர் ஆஜராகினர். ஏற்கனவே, இந்த ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நீதிமன்றங்களில் மைக்கேல் கிறிஸ்டியனுக்காக ஆஜரான தன்னிடம் இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உள்ளதாகவும் அதை சி.பி.ஐ. கோர்ட்டில் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் ரோஸ்மேரி பாட்ரிசி கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதற்கு இணங்க கிறிஸ்டியன் மைக்கேலின் விசாரணை காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை காவலின்போது அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் ரோஸ்மேரியின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    Next Story
    ×