search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி ரெயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட காட்சி.
    X
    டெல்லி ரெயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட காட்சி.

    டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் ரெயில் மறியல்

    விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். #FarmersProtest
    புதுடெல்லி:

    விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், அதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், புயல் சேதத்தால் அழிந்து விட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு விரைந்து வழங்க வேண்டும், 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், சொந்தமாக பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்,

    அழிந்துவிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தியும், மத்திய அரசின் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை கிடைக்காமல் உள்ளதை மத்திய அரசு விவசாயிகளுக்கு விரைந்து பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியில் இன்றும், நாளையும் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.

    இதற்காக கடந்த 27-ந்தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அவர்கள், அங்கிருந்து சென்னையில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை டெல்லி சென்றடைந்தனர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய அவர்கள் ரெயிலை மறித்தனர். என்ஜின் மீது ஏறி நின்ற அவர்கள் தண்டவாளத்திலும் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தமிழக விவசாயிகள் கழுத்தில் மண்டை ஓடு, எலும்பு மாலை அணிந்து அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த காட்சி.


    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். தொடர்ந்து விவசாயிகள் கையில் மண்டை ஓடு, கழுத்தில் எலும்பு மாலை அணிந்தவாறு அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். இன்றும், நாளையும் அவர்கள் ராம்லீலா மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேல், மாநில செயலாளர்கள் வந்தவாசி தினேஷ், முருகன், கடலூர் சக்திவேல், மாவட்ட தலைவர்கள் சென்னை மாவட்டம் ஜோதிமுருகன், விழுப்புரம் மாவட்டம் ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம் சண்முகம், கோவை மாவட்டம் படிஸ்வரன், திருச்சி மாவட்டம் பொன்னுசாமி, கரூர் மாவட்டம் சரவணன் , திருவள்ளூர் மாவட்டம் நாககுமார், தஞ்சாவூர் மாவட்டம் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே டெல்லியில் திருச்சி விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினர். பாராளுமன்றம் முன்பு ஆடைகள் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் தமிழக விவசாயிகளால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #FarmersProtest
    Next Story
    ×