search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவை போலவே காங்கிரசும் எங்கள் கட்சியை அழிக்க சதி செய்கிறது - மாயாவதி குற்றச்சாட்டு
    X

    பாஜகவை போலவே காங்கிரசும் எங்கள் கட்சியை அழிக்க சதி செய்கிறது - மாயாவதி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். #Mayawati
    லக்னோ:

    2019 பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு பா.ஜ.கவை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் பெரும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    2019 தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 

    பா.ஜ.க. ஆட்சியில் உள்ள சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் மாயாவதி கூட்டணி வைத்துள்ளார். இப்போது இதே நிலையை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முன்னெடுத்துள்ளார் மாயாவதி.

    மாயாவதி இதுதொடர்பாக பேசுகையில், “திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை. அவர்கள் அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளுக்கு பயப்படுகிறார்கள். மாயாவதிக்கு மத்திய அரசிடம் இருந்து நெருக்கடி என்று திக்விஜய் சிங் கூறுவதில் எந்த ஒரு அடிப்படையும் கிடையாது. காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி தொடர்பான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நோக்கம் நேர்மையானது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டணிக்கு நெருக்கடியான நிலையே ஏற்படுத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆணவமாக உள்ளது. தனியாகவே பா.ஜ.கவை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான நிலை அவர்களுடைய (காங்கிரஸ்) ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் மறக்கவில்லை. தவறை சரிசெய்யுவும் அவர்கள் விரும்பவில்லை,” என கூறியுள்ளார். 

    ‘பா.ஜ.கவை போன்று காங்கிரசும் எங்களுடைய கட்சியை அழித்துவிட வேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகிறது. எனவே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம்’ என கூறியுள்ளார் மாயாவதி. 

    மாயாவதியின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் காங்கிரசுக்கு நேரிட்டுள்ள மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×