search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை ரத்து - இந்தியா அறிவிப்பு
    X

    பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை ரத்து - இந்தியா அறிவிப்பு

    அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்துள்ளது. #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளன. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார்.
     
    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.



    இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் மூன்று போலீஸ் அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். மேலும், பயங்கரவாதி புர்ஹான் வானிக்கு அஞ்சல் தலைகளும் வெளியிட்டுள்ளது.

    இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    Next Story
    ×