search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவை தாக்கிய புயலால் 8 மாவட்டங்களில் வெள்ளம் - மேலும் 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
    X

    ஒடிசாவை தாக்கிய புயலால் 8 மாவட்டங்களில் வெள்ளம் - மேலும் 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

    ஒடிசாவை தாக்கிய புயலால் 8 மாவட்டங்களில் இடைவிடாது கொட்டிய மழையால் எங்கும் வெள்ளக்காடானது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Daye #Rain
    புவனேஷ்வர்:

    வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா - ஒடிசா இடையே உருவான புயல் சின்னம் நேற்று நள்ளிரவு புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘தயே’ என பெயரிடப்பட்டது.

    இன்று அதிகாலை ‘தயே’ புயல் ஒடிசாவின் கோபால்பூரில் கரையை கடந்து தாக்கியது. அப்போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பேய் மழை கொட்டியது.

    புயல் கரையை நெருங்கும் போதே மழை தொடங்கியது. புயல் தாக்கியபோது கன மழை கொட்டியது. கஜபதி, கஞ்சம், பூரி, ராயகடா, காலஹண்டி, கோரபுட், மால்கங்கிரி, நபரங்க்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் இடைவிடாது கொட்டிய மழையால் எங்கும் வெள்ளக்காடானது.

     ஒடிசாவை தாக்கிய புயலால் வெள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    அங்கு தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி ராயகடா, காலஹண்டி, கோராபுட், நபரங்க்பூர், மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து காற்றின் வேகம் 80 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

    இந்த புயலால் தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. #Daye #Rain


    Next Story
    ×