என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் சோகம் - நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #JammuKashmir
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அந்த நீர்வீழ்ச்சியில் திரண்டனர். அவர்கள் அனைவரும் அருவியில் உற்சாகமாக நீராடிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் திடீரென மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
பாறைகள் விழுந்து உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், அங்கு பாறைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






