search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் மாநில கட்சிகள்
    X

    பாராளுமன்ற தேர்தல் - காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் மாநில கட்சிகள்

    2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் அமைத்துள்ள மெகா கூட்டணியில் ஜார்க்கண்ட் மாநில கட்சிகளும் இணைகிறது.
    புதுடெல்லி:

    2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தயாராகி வருகின்றன.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது பழைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து பேசி கூட்டணியை புதுப்பித்து வருகிறார். இது தவிர புதிதாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறிய கட்சிகளையும் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதேபோல் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரசும் மெகா கூட்டணி அமைத்து வருகிறது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த கர்நாடக மந்திரிசபை பதவி ஏற்பு விழாவில் சோனியா, ராகுல் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று திரண்டனர்.

    தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து அளித்து எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜனதாவுக்கு எதிராக திரட்டியது. அடுத்து இந்த கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறது. இதுதவிர ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மாநில கட்சியான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகளை மெகா கூட்டணிக்கு இழுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுடன் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதிலும் கூட்டணி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளது.

    இங்கு சமீபத்தில் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான அகில இந்திய பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங் கூறும்போது 2019 பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது என்றார்.
    Next Story
    ×