search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தைரியம் இருந்தால் பா.ஜ.க. கூட்டணி அரசில் இருந்து விலகுங்கள்- சிவ சேனாவுக்கு ரானே சவால்
    X

    தைரியம் இருந்தால் பா.ஜ.க. கூட்டணி அரசில் இருந்து விலகுங்கள்- சிவ சேனாவுக்கு ரானே சவால்

    தனித்து போட்டியிடுவதாக கூறும் சிவ சேனாவுக்கு தைரியம் இருந்தால், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி அரசில் இருந்து விலக வேண்டும் என நாராயண் ரானே சவால் விடுத்துள்ளார். #ShivSena #RaneAttackSena
    மும்பை:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா-சிவசேனா இடையே சமீப காலங்களாக கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மத்திய பா.ஜனதா அரசின் கொள்கைகளையும், பிரதமர் மோடியையும் சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்தது. இதனால் இரு கட்சிகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று கூறி சிவசேனா கட்சி உள்ளாட்சி தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டது. மேலும் வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. சிவ சேனாவை சமாதானப்படுத்தி கூட்டணியை தக்க வைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.



    இதற்காக நேற்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த பா.ஜனதா- சிவசேனா இணைந்து செயல்படுவது பற்றியும், இரு கட்சிகளிடையேயான பிரச்சினைகள் பற்றியும் அமிர் ஷா விரிவாக பேசியதாக தெரிகிறது. ஆனாலும் சிவ சேனா தனது நிலையில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும்  மகாராஷ்டிரா சுவாபிமான் பக்க்ஷா கட்சியின் தலைவருமான நாராயண் ரானே பொதுக்கூட்டத்தில் பேசியபோது சிவ சேனாவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

    அவர் பேசும்போது, ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவதாக நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தை மட்டும் ஏன் விடவில்லை? வெளியேற வேண்டியதுதானே? ஆட்சியில் ஒரு அங்கமாக இருந்துகொண்டு உங்கள் கூட்டணியை விமர்சிக்கிறீர்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் மட்டும் தனித்து போட்டியிடுவது சிவ சேனாவுக்கு உகந்தது அல்ல.  

    மராட்டிய மக்கள் சிவ சேனாவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளித்தனர். ஆனால், அவர்களுக்கு சிவ சேனா என்ன செய்தது? ஆட்சி அதிகாரத்தில் எல்லா பொறுப்பையும் பா.ஜ.க.விடம் இருந்தால், நீங்கள் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட மட்டும்தான் செய்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவானையும் கடுமையாக சாடினார் நாராயண் ரானே. #ShivSena #RaneAttackSena
    Next Story
    ×