search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேட்ட கேள்வி வேறு மோடி சொன்ன பதில் வேறு - ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டல்
    X

    கேட்ட கேள்வி வேறு மோடி சொன்ன பதில் வேறு - ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டல்

    சமீபத்தில் சிங்கப்பூரில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நிருபர்கள் கேட்ட கேள்வி வேறு, அந்த கேள்விக்கு மோடி சொன்ன பதில் வேறு என ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    சிங்கப்பூரில் நான்யங் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் சிங்கப்பூர் பத்திரிக்கையாளர்கள் ஏராளமான கேள்விகள் கேட்டனர். அதற்கு பிரதமர் மோடி தன்னிச்சையாக இந்தியில் பதில் அளித்தார்.

    அவரது பதிலை அருகில் இருந்த ஒருவர் மொழி பெயர்த்து நிருபர்களுக்கு விளக்கி கூறினார். ஆனால், இந்த கேள்வி, பதில் உண்மையானதாக நடக்கவில்லை என்றும், பிரதமர் மோடி சில பதில்களை முன்கூட்டியே எழுதி வைத்து அதை நிருபர்களுக்கு தெரிவித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக, ராகுல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    பிரதமர் மோடி சிங்கப்பூரில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லவில்லை. அவர் பதில் அளித்ததை அருகில் இருந்த மொழி பெயர்ப்பாளர் அப்படியே சொல்லவில்லை.

    அதற்கு பதில் மொழி பெயர்ப்பாளர் தன்னிடம் இருந்த தாளில் ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதிலை படித்தார். நிருபர்கள் கேட்ட கேள்வி வேறு, மோடி சொன்ன பதில் வேறு.

    அந்த பேட்டியில் பிரதமர் மோடி உண்மையான பதிலை சொல்லாதது ஒரு வகையில் நல்லதுதான். அவர் உண்மையான பதிலை சொல்லியிருந்தால் நமக்கெல்லாம் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகி இருக்கும்.

    இவ்வாறு ராகுல் கிண்டல் செய்துள்ளார்.

    அந்த ட்விட்டர் பதிவுடன் பிரதமர் மோடி பேட்டி அளிக்கும் காட்சியையும், அவரது உதவியாளர் ஏற்கனவே பதில் எழுதி வைத்து வாசிக்கும் காட்சியையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

    ராகுலின் இந்த கிண்டலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு இரங்கல் தெரிவித்து கூட கருத்து எழுத தெரியாது. செல்போனை பார்த்து எழுதியவர். அவர் பிரதமரை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    ராகுல்காந்தி இன்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப உள்ளார். அப்போது இதற்கு அவர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×