search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
    X

    கர்நாடகாவில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

    கர்நாடக மாநில சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. #KarnatakaElection #FloorTest #ProtemSpeaker
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியதுபோல், தற்காலிக சபாநாயகர் போபையா நியமனமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூத்த உறுப்பினர் இருக்கும்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த போபையாவை நியமித்ததற்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்தது.

    போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவு மனு தாக்கல் செய்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

    அதன்படி போபையா நியமனத்திற்கு எதிரான மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் முத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அப்போது தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டதில் மரபு மீறப்பட்டுள்ளதாகவும் அவர்போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். தற்காலிக சபாநாயகராக போபையா நீடிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.



    மூத்த எம்எல்ஏக்கள் நிறையபேர் இருக்கும்போது ஆளுநர் ஏன் போபையாவை நியமித்தார்? என நீதிபதி பாப்தே கேள்வி எழுப்பினார்.  அதேசமயம் போபையா இல்லை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை யார் கண்காணிப்பார்கள்? வாக்கெடுப்பை ஒத்திவைக்க நேரிடும். சபை நடவடிக்கைகள் வெளிப்படையாக நடைபெறுதற்கு சிறந்த வழி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை நேரலை செய்வதுதான் என்றும் நீதிபதிகள் கூறினர்.

    நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதையடுத்து தீர்ப்பு அளித்த நீதிபதிகள், தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை ரத்துசெய்ய மறுத்துவிட்டனர். அதேசமயம், சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் வீடியோ எடுப்பதுடன், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர். #KarnatakaElection #FloorTest #ProtemSpeaker
    Next Story
    ×