search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு
    X

    காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் இன்று வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. #CauveryMangementBoard #CauveryDraftScheme
    புதுடெல்லி:

    காவிரியில் ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழ் நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு “ஸ்கீம்” தயாரித்து தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    ஆனால் ஸ்கீம் என்பது எதை குறிக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உருவானது.

    ஸ்கீம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருப்பது காவிரி மேலாண்மை வாரியத்தை குறிக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக மாநில அரசு ஸ்கீம் என்பதற்கு வாரியம் அமைக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல என்று தெரிவித்தது.

    இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்று தமிழ்நாடு-கர்நாடகாவில் விவசாயிகள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிரமாக பிரசாரம் நடந்ததால் மத்திய அரசு தனது முடிவை அறிவிப்பதில் தாமதம் செய்தது.

    சுப்ரீம்கோர்ட்டில் அடுத்தடுத்து 3 தடவை மத்திய அரசு மனு செய்து கால அவகாசம் பெற்றது. கடைசியாக கடந்த 8-ந்தேதி காவிரி நதிநீர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிபதிகள் மிகவும் கண்டிப்பான உத்தரவு ஒன்றை வெளியிட்டனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “14-ந்தேதி கண்டிப்பாக காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினம் மத்திய நீர்வளத் துறை செயலாளர் அவசியம் கோர்ட்டுக்கு வர வேண்டும். இந்த வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் எதையும் பெற தேவை இல்லை” என்று கூறி இருந்தனர்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 11 மணிக்கெல்லாம் இதில் விடை தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 வழக்குகளுக்கு பிறகு காவிரி வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    இதனால் சற்று தாமதமாக காவிரி வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆனார்.

    அவர் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார். சீலிடப்பட்ட கவரில் வைத்து அந்த வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அதில் மத்திய அரசு என்ன கூறி இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தது.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அதில் வழிவகை செய்துள்ளதா? அல்லது ஆணையம் அமைக்க கூறி உள்ளதா? அல்லது குழு ஒன்று அமைக்க பரிந்துரை செய்து உள்ளதா? என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் சில விளக்கங்கள் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    காவிரி நதிநீரை பங்கீடு செய்து கொள்ள 10 பேர் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அந்த அமைப்பில் மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இடம் பெறுவார்.

    அந்த அமைப்பில் ஒரு தலைவர், ஒரு நிரந்தர உறுப்பினர். 2 பகுதி நேர உறுப்பினர்கள், 2 முழு நேர உறுப்பினர்கள், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

    அந்த அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர் 5 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கும் வகையில் செய்யலாம்.

    இந்த அமைப்பானது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பாக இருக்கும். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்துள்ள அனைத்து உத்தரவைகளையும் இந்த அமைப்பு அமல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

    காவிரி நதிநீரை பங்கீடு செய்து கொள்வதற்கு வாரியம் அல்லது அமைப்பு எதுவாக இருந்தாலும் அது சுமூகமாக செயல்பட வேண்டியது முக்கியம் ஆகும். அதை 10 பேர் கொண்ட குழு செய்யும்.

    இந்த 10 பேர் குழுவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகள் 40 சதவீத சம்பளம் வழங்க வேண்டும். கேரளா அரசு 15 சதவீதமும், புதுச்சேரி மாநில அரசு 5 சதவீதமும் சம்பளம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு தகவல்கள் வெளியாகி உள்ளன.



    காவிரி வரைவு திட்டம் தாக்கல் மற்றும் மத்திய அரசின் விளக்கத்தை தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு திருப்தி அடைந்துள்ளது. மத்திய அரசு சீல் வைத்து கொடுத்துள்ள கவரில் உள்ள தகவல்களை 2 நாட்களில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

    அதன் பிறகு நீதிபதிகள் தங்களது முடிவுகளை வெளியிடுவார்கள். அதற்கு வசதியாக இந்த வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (16-ந்தேதிக்கு) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    அன்றைய தினம் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. அந்த அமைப்புக்கு காவிரி நீர் திறப்பு உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்படுகிறது.

    எனவே காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டாலும் அதற்கு இணையான ஒரு நிர்வாகத்தை அமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு உருவாக்கி இருப்பதால் உரிய பலன்கள் கிடைக்கும் தெரிகிறது. #CauveryMangementBoard #CauveryDraftScheme 
    Next Story
    ×