search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்து கணிப்பில் தகவல்
    X

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்து கணிப்பில் தகவல்

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #KarnatakaAssemblyElections #congress
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் இரு கட்சிகளும் சம அளவில் வெற்றி பெறும் என்றும் எனவே தொங்கு சட்டசபைதான் அமையும் என்றும் தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் ‘சி போர்’ என்ற அமைப்பு கர்நாடகா தேர்தல் தொடர்பாக புதிய கருத்து கணிப்பை நடத்தி உள்ளது. 224 தொகுதிகளிலும் உள்ள 6,247 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

    இந்த கருத்து கணிப்பு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அது இதற்கு முந்தைய கருத்து கணிப்புகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட வகையில் உள்ளது.

    அந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 118 முதல் 128 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எனவே புதிய கருத்து கணிப்புபடி காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.



    பா.ஜனதா கட்சிக்கு 63 முதல் 73 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தேவேகவுடா தலைமையிலான மத சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 29 முதல் 36 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கிடைப்பதற்கு எத்தகைய காரணங்கள் அடிப்படையாக உள்ளன என்ற தகவல்களும் புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு எப்போதுமே செல்வாக்கு உண்டு.

    கடந்த தேர்தலில் அந்த 28 தொகுதிகளில் 13 இடங்களில் பா.ஜ.க. கைப்பற்றியது. ஆனால் பா.ஜ.க.வுக்கு 8 இடங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

    தவன்கரே, சித்ரதுர்கா, சிவமோகா ஆகிய மாவட்டங்களில் காங்கிரசை விட பா.ஜனதாவுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. மும்பை கர்நாடகா, ஐதராபாத் கர்நாடக, கடலோர கர்நாடகா, பழைய மைசூர் மண்டலம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது.


    மேலும் கர்நாடகாவில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக ஆதரவு இருப்பதும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இளைஞர்களில் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் காங்கிரசுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

    பெண்களில் சுமார் 47 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் சித்தராமையா மகளிர் நல மேம்பாட்டுக்காக ‘அன்ன பாக்கியா’, கசிரா பாக்கியா’ என்ற 2 திட்டங்களை அறிவித்தார். அந்த 2 திட்டங்களுக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

    இளைஞர்கள், பெண்களின் மனமாற்றம் காரணமாக கர்நாடகாவில் மோடி அலை இல்லை என்று கருத்து கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. #KarnatakaAssemblyElections #congress
    Next Story
    ×