search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெகா கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி தீவிரம் - சோனியாவுடன் இன்று சந்திப்பு
    X

    மெகா கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி தீவிரம் - சோனியாவுடன் இன்று சந்திப்பு

    பா.ஜ.கவை வீழ்த்த தேசிய அளவில் மாற்று அணியை உருவாக்குவது தொடர்பாக சோனியாவை இன்று மம்தா சந்தித்து பேச உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

    அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் புதிய வியூகங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று வரும் பா.ஜ.க., அடுத்து கர்நாடகா தேர்தலை மிக முக்கியமானதாக கருதுகிறது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தன்னந்தனியாக நின்று வீழ்த்த முடியாது என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

    எனவே மாநிலத்தில் உள்ள செல்வாக்கு மிக்க கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதை கருத்தில் கொண்டே சமீபத்தில் முக்கிய தலைவர்களை அழைத்து சோனியாகாந்தி தனது வீட்டில் விருந்து கொடுத்தார்.



    இந்த நிலையில் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி களத்தில் குதித்துள்ளார். பா.ஜ.க.வுக்கு எதிரியாக உள்ள கட்சிகள் அனைத்தையும் ஓரணிக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக அவர் புதிய வியூகங்களுடன் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசினார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் பேச்சு நடத்தினார்கள்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த வேண்டுமானால், தேசிய அளவில் மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று அப்போது சரத்பவாரிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். அதை சரத்பவாரும் ஏற்றுக் கொண்டார்.

    அதன் பிறகு சிவசேனா, தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, ராஷ்டீரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ஜர்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 7 கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டால் பா.ஜ.க.வை எளிதில் வீழ்த்த முடியும் என்று அவர்களிடம் மம்தா பானர்ஜி விளக்கி கூறினார்.

    காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்துப் பேசவும் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    இந்த சந்திப்பின் போது தேசிய அணியை எப்படி உருவாக்குவது என்பது பற்றி சோனியாவும், மம்தாவும் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கைகள் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆனால் மம்தா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு முழு அளவில் வெற்றி கிடைக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளில் சிவசேனா, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பிஜு ஜனதா தளம், ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் மத்தியில் பா.ஜ.க- காங்கிரஸ் கட்சிகள் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    காங்கிரசுடன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது உறுதியானால் அந்த கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு இருக்காது. விலகி விடும். இதனால் மம்தாவின் மாற்று அணி திட்டம் வெற்றி பெறுமா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் தேசிய மாற்று அணி அமைக்கும் திட்டத்துக்கு கை கொடுக்காவிட்டால் அவர்களை கழற்றி விட்டு விட்டு காங்கிரஸ் தலைமையில் புதிய அணியை உருவாக்க மம்தா தீவிரமாக உள்ளார்.

    அந்த அணி சார்பில் பா.ஜ.க.வை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்துள்ளார். #tamilnews
    Next Story
    ×