search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வியில் முடிந்தது: இஸ்ரோ தலைவர் கிரண்குமார்
    X

    விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வியில் முடிந்தது: இஸ்ரோ தலைவர் கிரண்குமார்

    கடல்சார் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீஹரிகோட்டா:

    கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைக்கோள்களை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

    இதில் முதலில் செலுத்தப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கடிகாரங்கள் பழுதாகின. எனவே, அதற்கு மாற்றாக 1,425 கிலோ எடைகொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

    இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தும் ஆயத்தப் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர்.

    ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பகல் 2 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் இறுதிக்கட்ட செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    29 மணி நேர கவுண்ட்டவுன் முடிவடைந்த நிலையில் இன்று மாலை 7.00 மணிக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைக்கோளை தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

    சிறிது நேரத்தில் விண்ணில் பாய்ந்த ராக்கெட் இலக்கை நோக்கி செல்லவில்லை. இதையடுத்து, இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "ராக்கெட்டில் இருந்து செயற்கைக் கோள் பிரிந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து பின்னர் ஆராயப்படும்" என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×