search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளுவேல்: குழந்தைகளை காப்பாற்ற, பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - போலீஸ் அதிகாரி வேண்டுகோள்
    X

    புளுவேல்: குழந்தைகளை காப்பாற்ற, பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - போலீஸ் அதிகாரி வேண்டுகோள்

    புளுவேல் விளையாட்டில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற ,பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
    பெங்களூரு:

    நீலத்திமிங்கல விளையாட்டு என்று அழைக்கப்படும் புளுவேல் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பலர் பலியானார்கள். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று விக்கி என்ற கல்லூரி மாணவர் பலியானார்.

    தற்போது அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த போனில் புளுவேல் விளையாட்டை டவுன்லோடு செய்து கொண்டு விளையாடி வருகிறார்கள். ஒரு முறை இந்த விளையாட்டை டவுன்லோடு செய்தால் 50 நாட்கள் தொடர்ச்சியாக விளையாடலாம். ஆனால் இந்த விளையாட்டு ஆபத்தான உயிரை பணயம் வைத்து விளையாடும் மிரட்டல் விளையாட்டு ஆகும்.

    கையை பிளேடால் கிழித்துக்கொள்- அதிகாலை 4-30 மணிக்கு பேய் படம் பார்- உயரமான மலையில் இருந்து குதி-ஆபத்தான பாதையில் செல் என்று பல கட்டளைகள் வரும். இதை உண்மை என்று நம்பி இந்த விளையாட்டை விளையாடும் அப்பாவி வாலிபர்கள் அந்த கட்டளையை ஏற்று நிறைவேற்றும் போது உயிரை இழக்கின்றனர்.

    இந்த விளையாட்டுக்கு குழந்தைகள் அடிமையாகாமல் இருக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூருவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:-

    பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் ஸ்மார்ட் போன் போன்ற விலை உயர்ந்த செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கிற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

    இதுதவிர போனில் கேம்களையும் டவுன்லோடு செய்து கொண்டு விளையாடுகிறார்கள்.ஆபத்தான பாதையில் கார் மற்றும் வாகனங்களை இயக்குவது குறித்த கேம்களை சிலர் டவுன்லோடு செய்து விளையாடுகிறார்கள்.

    சரி நமது குழந்தைகள் இதுபோன்ற கேம்களை விளையாடுகிறார்கள் என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் நீலத்திமிங்கலம் என்று அழைக்கப்படும் புளுவேல் விளையாட்டை அவர்கள் டவுன்லோடு செய்து விளையாடுகிறார்கள்.

    இந்த விளையாட்டு கேமை 50 நாட்கள் வரை விளையாடலாம். இது ஆபத்தான விளையாட்டு ஆகும். சில சமயம் கையை பிளேடால் கிழித்துக்கொள் என்று கட்டளை வரும். இதை நம்பி பல குழந்தைகள் கையை பிளேடால் கிழித்து கொள்வார்கள். மலை உச்சியில் இருந்து குதி என்று உத்தரவு வரும். ஆபத்தை உணராமல் மலை உச்சிக்கு சென்று உயிரை மாயத்தவர்கள் ஏராளம்.ஆபத்தான பேய் படங்களை பார் என்றும் கட்டளை வரும். பலர் நள்ளிரவு நேரத்தில் பேய் படம்பார்த்து பயத்தில் இறந்து போய் விடுவார்கள்.

    சிலருக்கு தற்கொலை செய்து கொள் என்ற கூட கட்டனை வரும். இதைநம்பி தற்கொலை செய்து கொண்டவர்கள்கூட உண்டு.

    இந்த விளையாட்டின் ஆபத்தை உணர்ந்த மத்திய அரசு இதற்கு தடை விதித்து உள்ளது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கக் கூடாது. மீறி கொடுத்தால் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டை குழந்தைகள் விளையாடுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

    இது போன்ற விளையாட்டுகளை விளையாடக்கூடாது என்று கனிவாக எடுத்து சொல்லவேண்டும். அடிக்கடி பெற்றோர் குழந்தைகளை கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

    தங்களது குழந்தைகள் பேஸ்புக்போன்ற சமூக வளைத்தளங்களில் பதிவுகளை போட்டால் அவர்கள் பதிவு போடும் அளவுக்கு முதிர்ச்சி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

    நீலத்திமிங்கலம் போன்ற ஆபத்தான விளையாட்டுக்களில் இருந்து அவர்களை காப்பாற்ற பெற்றோர் அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×